இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கவனம் ஈர்த்த இளம் பேட்ஸ்மேனாக ஹைதராபாத்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா இருந்து வருகிறார். காயத்தில் இருந்து மீண்டிருக்கும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு வருவதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை வீரர்களை இல்லை என்கின்ற பெரிய குறை இருந்தது. இந்தக் குறையை போக்க மிகவும் நம்பிக்கையானவராக திலக் வர்மா பார்க்கப்பட்டார். மேலும் இவர் வலது கையில் ஆப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பீர் எதிர்பார்ப்பு
மகேந்திர சிங் தோனியின் காலத்தில் சச்சின், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் என ஒரு பெரிய பட்டாளமே பகுதி நேர பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள். சவுரவ் கங்குலி கேப்டன்சி காலத்திலுமே இப்படியான பகுதி நேர பந்துவீச்சாளர்கள் மிக அதிகமாக இருந்தார்கள். ஆனால் விராட் கோலி காலத்தில் முழுமையான பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கவுதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களிலும் இதை தெளிவாக உணர முடிந்தது. எனவே இதைக் குறி வைத்து திலக் வர்மா நகர்ந்து வருகிறார்.
நான் டெஸ்ட் ஆல்ரவுண்டர்
இதுகுறித்து தெரிவித்திருக்கும் திலக் வர்மா கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் குறிப்பாக கடந்த ஆண்டு முதல் நான் என்னுடைய பந்துவீச்சில் மிகவும் உழைத்து வருகிறேன். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வருவதற்கு நான் நிறைய வேலை செய்து வருகிறேன். இந்த வடிவத்தில் நான் என்னை ஆல்ரவுண்டராக நிரூபித்து விட்டால் வெள்ளைப்பந்து வடிவத்திலும் வெகு எளிதாக என்னால் நிரூபித்து விட முடியும்.
துலீப் டிராபி ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்கு தேர்வாவதற்கான தொடராக இருக்கிறது. இருந்த போதிலும் கூட நாங்கள் எங்கள் தனிப்பட்ட வெற்றிகளை பார்க்காமல் நாங்கள் விளையாடும் அணியின் வெற்றிக்காகவே உழைப்போம். அணியின் தேவை என்ன இருக்கிறதோ அதற்கு தகுந்தது போல் விளையாடுவோம். பொதுவாக வெற்றி பெறும் அணியில் இருந்தாலே இந்திய அணியில் நமக்காக இடம் காத்திருக்கும். எனவே நான் எனது அணி வெற்றி பெற விரும்புகிறேன்.
இதையும் படிங்க : 27 ரன் தேவை.. பறந்த 6,6,6,6.. 19 பந்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கீரன் பொல்லார்டு – சிபிஎல் 2024
சர்வதேச கிரிக்கெட் மிகவும் வேகமானது. அங்கு நாம் வெகு சீக்கிரத்தில் உடனுக்குடனே நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கு பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் முதிர்ச்சி அடைந்தவர்கள். நாம் செட்டில் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு இருக்க முடியாது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.