தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி அணி ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே பேட்ஸ்மேன்களால் சரளமாக ஷாட் விளையாட முடியவில்லை. இப்படியான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்ரேயா ஐயர் அதிரடியாக 44 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கௌரவமான இலக்கை வைத்தாலும் கூட ருதுராஜ் அணி அதை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஏற்பட்டுள்ள போட்டி
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் முதல் நான்கு இடங்கள் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில் மற்றும் விராட் கோலிக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் உறுதியாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவார். பேட்டிங் வரிசையில் ஆறாவது இடம் மட்டுமே காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆறாவது இடத்திற்கு கேஎல்.ராகுல், துருவ் ஜுரல், சர்பராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் என பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது. மேலும் 15 பேர் கொண்ட அணியில் ஒரு பேக்கப் பேட்ஸ்மேனுக்கும் இடம் இருக்கிறது. எனவே இந்த நால்வரில் இருவர்தான் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இருவரில் ஒருவர்தான் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியும். பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? என்பது சுவாரசியமாக மாறி இருக்கிறது.
எந்த நாளிலும் அரைசதம் அடிப்பேன்
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “எதிரணியினர் சரியான பகுதிகளில் பந்து வீசிய காரணத்தினால் நான் கொஞ்சம் இண்டெண்ட் காட்டி அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. நான் அதிரடியாக விளையாடி ஸ்கோர் போர்டில் கௌரவமான ஒரு இலக்கை நிர்ணயிக்க முடியுமா? என்று பார்த்தேன். பந்து பழையதாகி விட்டதால் நான் ஒரு சான்ஸ் எடுத்தேன். ஆனால் என்னால் எந்த நாளிலும் ஒரு அரைசதம் அடிக்க முடியும்.
இதையும் படிங்க : நிலக்கரி சுரங்கத்தில் வைரமா?.. சச்சின் மகனா இருந்தாலும் இதுதான் நிலைமை – யுவராஜ் சிங் தந்தை பேட்டி
ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவில்லை. இருந்த போதிலும் எங்கள் அணியின் சரண் சிங் சுழல் பந்துவீச்சில் சரியான இடங்களில் பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தில் உருவாக்கி இருந்த கால் தடங்களைப் பயன்படுத்தி வீசினோம். அந்த இடங்களில் பந்து நன்றாக சொல்கிறது. நாங்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு மேலும் முன்னேறி செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.