இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்காக இந்திய அணியில் விளையாடிய சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மீண்டும் இந்த இளம் இந்திய அணியில் இணைந்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் கில் 66 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு சேசிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் இந்திய அணி இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் அவரே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க, ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் விளாசிய அபிஷேக் ஷர்மா இந்தப் போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் மூலம் ஒரு போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி சதம் விளாசி அடுத்த போட்டியிலேயே மூன்றாவது இடத்தில் களமிறங்கி குறைந்த ரன்களில் வெளியேறிய இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக அபிஷேக் ஷர்மா மாறி இருக்கிறார்.
ஏற்கனவே 2022ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி 122 ரன்கள் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த சாதனையை ஏற்கனவே படைத்திருக்கும் நிலையில், தற்போதைய கேப்டன் கில்லின் வேண்டுகோளுக்கு இணங்க அபிஷேக் ஷர்மா மூன்றாவது இடத்தில் களமிறங்கி தேவையற்ற சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க:274 ரன்.. 2 பேர் 70 பந்தில் 199 ரன்கள்.. ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸை துவம்சம் செய்தது
தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாறிய கேப்டன் கில் இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடி 66 ரன்கள் குவித்து மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.