இன்று குவாலியர் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்தது. மேலும் மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.
வருண் சக்கரவர்த்தி கலக்கல்
முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 2 பந்தில் 4 ரன்கள், பர்வேஸ் உசைன் யமான் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து கேப்டன் நஜ்முல் சாந்தோ 25 பந்தில் 27 ரன், தவ்ஹித் ஹ்ரிடாய் 18 பந்தில் 12 ரன், மகமதுல்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் நட்சத்திர வீரர் மெஹதி ஹசன் மிராஸ் தாக்குப்பிடித்து விளையாடி 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவரில் பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆகி 127 ரன்கள் எடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் வந்த வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 31 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். அர்ஸ்தீப் சிங் தன் பங்குக்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதிரடியில் மிரட்டிய இந்திய அணி
இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 7 பந்தில் 16 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: வீசிய முதல் ஓவரே சாதனை.. அரிய ரெக்கார்ட் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்.. பங்களாதேஷ் டி20
இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 15 பந்தில் 16 ரன், ஹர்திக் பாண்டியா 16 பந்தில் 39 ரன்கள் என இருவரும் ஆட்டமெலக்காமல் எடுக்க இந்திய அணி 11.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது.