இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேச அணியோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 68.52% புள்ளிகளோடு இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி 62 சதவீத புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா வலுவான நிலைமையை பெறும்.
மேலும் அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி 1932ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் மொத்தமாக 579 போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ள நிலையில் அதில் 178 வெற்றிகளையும், 178 தோல்விகள் மற்றும் 22 போட்டிகள் டிரா என்று சரிசமமான கலவையோடு இந்திய அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 92 ஆண்டுகளில் தோல்வி எண்ணிக்கையைத் தாண்டி இந்திய அணி பெறுகிற மகத்தான வெற்றி இதுவாகும். 178 வெற்றிகள் மற்றும் தோல்விகள் என இரண்டும் சரிசமமாக இருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் 179 என்று தோல்வி எண்ணிக்கையை விட ஒரு போட்டி இந்தியா முன்னிலை பெறும்.
இதனை இந்திய அணி அடுத்த போட்டியில் நிகழ்த்தும் என்று இந்திய ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் மோதிய டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் மகத்தான வெற்றியை பெற்றது. தற்போது கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளதால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க:எனக்கும் கோலிக்கும் நடுவுலதான் போட்டியே.. நிச்சயமா அந்த சம்பவங்கள் காத்திருக்கு – மிட்சல் ஸ்டார்க் பேச்சு
வங்கதேச அணியும் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு இந்த தொடரில் விளையாடும். எனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய படை வங்கதேச அணியை வீழ்த்தி மகத்தான சாதனையை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.