INDA vs ENGL.. 553 ரன்கள்.. இங்கிலாந்து லயன்ஸ் அசத்தல் ஆட்டம்.. இந்திய ஏ அணியை தனி ஆளாக காப்பாற்றும் ஆர்சிபி வீரர்

0
17312

இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம் ஆகும் வகையில் இரண்டு நாட்கள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டங்களை இந்தியா ஏ அணியும், இங்கிலாந்து லயன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து இரண்டாவது நான்கு நாள் ஆட்டம் கொண்ட பயிற்சிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜென்னிங்ஸ் மற்றும் அலெக்ஸ் லீஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 157 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் லீஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து 73 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.

- Advertisement -

158 பந்துகளில் 20 பவுண்டரி, இரண்டு சிக்ஸருடன் 154 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒன்டவுனில் களமிறங்கிய கேப்டன் போகனன் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 182 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 125 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய மவுஸ்லி அரை சதம் விளாசி ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய டெய்லென்டர் மேத்யூ பார்ட்ஸ் 44 ரன்கள் விளாச, கார்சன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உடன் 53 ரன்கள் விளாசினார்.

இறுதியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 553 ரன்கள் குவித்தது. இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சுதர் நான்கு விக்கெட்டுகளையும், கவேரப்பா இரண்டு விக்கெடுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது.

தற்போதைய வளர்ந்து வரும் நட்சத்திரமான சாய் சுதர்சன் முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஈஸ்வரன் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரஜத் பட்டிதார் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபாஸ்கான் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். அபாரமாக விளையாடிய ரஜத் பட்டிதார் 132 பந்துகளில் 18 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 140 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான ஆட்டம் தான் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. இந்திய அணி தற்போது 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து அணி தரப்பில் பிஷர் நான்கு விக்கெட்டுகளையும், மேத்யூ பார்ட்ஸ் பார்க்கின்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்தியா தற்போது 338 ரன்கள் பின்னிலை வகித்துள்ளது.