இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்டில் இலங்கை ஆதிக்கம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தினேஷ் சண்டிமால் 116, கமிந்து மெண்டிஸ் 184* குசால் மெண்டிஸ் 106* ரன்கள் எடுத்தார்கள். இந்த நிலையில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் என்று பிரம்மாண்டமாக ரன் குவித்தது. மேலும் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களில் சுருண்டது. இலங்கை அணியின் பிரபா ஜெயசூர்யா அற்புதமாக பந்துவீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி பாலோ ஆன் ஆகி தொடர்ந்து பேட்டிங் செய்தது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட்டம்
இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடும் முடிவில் இருந்தது. நியூசிலாந்து கான்வே 62 பந்தில் 61 ரன், கேன் வில்லியம்சன் 58 பந்தில் 46 ரன்கள் என அதிரடியாக விளையாடி வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்தரா 12, டேரில் மிட்சல் 1 ரன்னில் வெளியேறினார்கள்.
இன்றைய நாள் முடிவில் அதிரடியாக விளையாடிய டாம் ப்ளூன்டல் 50 பந்தில் 47 ரன், கிளன் பிலிப்ஸ் 41 பந்தில் 32 ரன் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். நியூசிலாந்து அணியின் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்க இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு இன்னும் 315 ரன்கள் எடுக்க வேண்டி இருக்கிறது. இந்தப் போட்டியையும் பெரிய வித்தியாசத்தில் இலங்கை அணி வென்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றும் என்பது 99 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. மேலும் ஒட்டுமொத்தமாக 80 ஓவர்களில் 15 விக்கெட்களை நியூசிலாந்து அணி இரண்டு நாட்களில் இழந்திருக்கிறது.