நடப்பு துலீப் டிராபி தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கின. இதில் ஒரு போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த முறை இந்தியா டி அணிக்கு துவங்க ஆட்டக்காரர்கள் மாற்றப்பட்டு, வீரர்கள் வித்தியாசமான இடங்களில் களமிறங்கினார்கள்.
தேவ்தத் படிக்கல் – ஸ்ரீகர் பரத் அபாரம்
இந்தியா டி அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக வந்த தேவ்தத் படிக்கல் 50, ஸ்ரீகர் பரத் 52 என நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த ரிக்கி பூய் அதிரடியாக விளையாடி 87 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இந்தியா டி அணிக்கு முதல் மூன்று இடங்களில் வந்த பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடித்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.
இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து களமிறங்கினார். இவர் கடந்த முறை இந்திய அணி 19 வயதுக்கு உட்பட்டவர்கள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று விளையாடியவர். இவர் தன்னுடைய பங்குக்கு 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஸ்ரேயா ஐயர் சொதப்பல் – சஞ்சு சாம்சன் கலக்கல்
இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இந்த முறையும் ஐந்து பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த தொடரில் இவருக்கு இது மூன்றாவது டக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெறும் 50 ரன்.. இலங்கை அணிக்கு நியூசிலாந்து பதிலடி.. லாதம் வில்லியம்சன் சென்சிபிள் இன்னிங்ஸ்.. முதல் டெஸ்ட்
இவருக்கு அடுத்து ஆறாவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி கலக்கினார். 83 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார. இன்று முதல் நாள் முடிவில் இந்தியா டி அணி 77 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தியா பி அணியின் தரப்பில் பந்துவீச்சில் ராகுல் சகர் 3 விக்கெட் வீழ்த்தினார்.