“எழுதி தரேன்.. ஹர்திக் பாண்டியா வந்தாலும் கேப்டன் ஆக முடியாது” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு!

0
236
Hardik

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடுவது மிகவும் சிறிய செய்திதான். ஆனால் டி20 உலகக்கோப்பையை அருகில் வைத்துக் கொண்டு, இந்திய டி20 அணியில் யார் இடம்பெறுவார்கள் என்கின்ற கோணத்தில் ஆப்கானிஸ்தான் தொடர் மிகப்பெரிய தொடராக மாறுகிறது.

இந்த நிலையில் நேற்று இந்தியத் தேர்வுக்குழு அதிரடியாக ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு இந்திய அணியை அறிவித்து ரசிகர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியத் தேர்வுக்கு குழுவின் இந்த அறிவிப்பில் மிக முக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்குப் பிறகு திரும்பி இருக்கிறார்கள்.

மேலும் இசான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ், கேஎல்.ராகுல், புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்யாததும் தேர்வுக் குழு என்ன மாதிரியான நகர்வை மேற்கொள்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இது பொதுவாகவே நல்ல முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “முதலில் நாம் அறையில் இருக்கும் யானையைப் பற்றி பேசலாம். அதாவது ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக வந்திருக்கிறார். இது மிகவும் சுவாரசியமான ஒன்று. 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு அடுத்து ஆறு மாதங்களில் இப்படி ஒரு அணியை தேர்வு செய்து இருந்தால், நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை அணியில் ரோகித் மற்றும் விராட் கோலி இருப்பார்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணியில் இல்லாதது ஒரு வித்தியாசமான உணர்வு. அவர்கள் இந்திய டி20 அணியில் இல்லாதது குறித்து எந்த விவாதங்களும் கூட நடைபெறவில்லை. அவர்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டார்கள். தேர்வுக் குழு வேறு திசையில் செல்வதாக கூறப்பட்டது.

இதன்பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் ரோகித் சர்மாவின் அழிவுகரமான அட்டாக்கிங் பேட்டிங் பார்த்தோம். விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார். நிலைமைகள் மாறி ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் விராட் கோலி வீரராகவும் அணிக்குள் திரும்பி இருக்கிறார்கள். இது ஒரு மிக முக்கியமான தேர்வு. ஏனென்றால் ரோகித் சர்மா விளையாடினால் கேப்டனாக மட்டுமே விளையாடுவார்.

தற்போது ஹர்திக் பாண்டியா வந்ததும் கேப்டன் ஆகி விடுவார் என்று நினைக்க வேண்டாம். இது நடக்காது என்று என்னால் எழுத்து பூர்வமாக எழுதித் தர முடியும். மேலும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியும் விளையாடுவது உறுதியாகிவிட்டது” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -