2020-ல் கோலி ஒன்று சொன்னார்.. என் வாழ்நாளில் அதை மறக்கவே மாட்டேன்.. பாபர் அசாம் நெகிழ்ச்சியான பேட்டி!

0
4522
Babar

நேற்று பாகிஸ்தான் முல்தானில் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாள் அணிகள் மோதின. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது!

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 131 பந்தில் 151 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை தேடித் தந்தார்.

- Advertisement -

மேலும் இந்தச் சதத்தின் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 19ஆவது சதத்தை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற உலகச் சாதனையை படைத்தார். மேலும் ஐந்தாவது விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பாகிஸ்தான் ஜோடி என்ற சாதனையை இப்திகார் அகமது உடன் சேர்ந்து நிகழ்த்தினார்.

இதற்கு முன்பு 5000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்திருந்தார். பாபர் அசாமின் பேட்டிங் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சீராகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த காரணத்தால் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது தற்காலத்தில் மிக அதிகமான ஒன்றாக இருக்கிறது. சில நேரங்களில் இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் புள்ளிவிபரங்களைக் கொண்டு மோதிக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பாபர் அசாம் விராட் கோலி உடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு, விராட் கோலி தன்னைக் குறித்துக் கூறிய மிக முக்கியமான வார்த்தைகள் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பாபர் அசாம் கூறும்பொழுது
“விராட் கோலி எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் என்னை சிறந்த பேட்டர் என்று செய்தி அனுப்பினார். யாராவது ஒருவர் உங்களுக்கு இதுபோன்ற கருத்துக்களை அனுப்பும்போது அது மிகச் சிறப்பானதாக இருக்கும். என்னைப் பற்றிய விராட் கோலியின் அந்த கருத்து எனக்கு மிகவும் பெருமையான தருணம். சில விஷயங்களும் சில பாராட்டுகளும் உங்களுக்கு நம்பிக்கையை தருகின்றன.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது அவரை சந்திக்க நான் சென்று இருந்தேன். அவர் அப்பொழுது உச்சத்தில் இருந்தார். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார். நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எனவே நான் அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள விரும்பினேன். எனக்கு சில பதில்கள் தேவைப்பட்டன. நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் என் கேள்விகளுக்கு மிக அழகாக விளக்கம் அளித்தார்!” என்று கூறி இருக்கிறார்!