“3 வருஷம் வலியோட விளையாடினேன்.. ஆனா இப்ப வாய்ப்ப மட்டும் விடமாட்டேன்..!” – ரஜத் பட்டிதார் அசத்தல் பேச்சு!

0
1345
Rajat

இந்திய அணியில் தற்போது வாய்ப்பு பெற்று விளையாடுவோம் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு முன்பாகவே இந்திய அணிக்கு தேர்வானவர் மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடி வரும் ரஜத் பட்டிதார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னுடைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இளம் வீரர் ஒருவர் காயமடையவே பெங்களூரு அணியில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இப்படி உள்ளே வந்த இவர் அந்த வருட ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றில் இரண்டு முறை அரை சதத்தை கடந்தவர் என்கின்ற அரிய சாதனையை படைத்தார். 16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் இதை செய்தது கிடையாது.

இங்கிருந்து பிசிசிஐ தேர்வு குழுவுக்கு இவர் மேல் பார்வை விழுந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இவர் காலில் காயமடைந்தார். இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் இந்த முறை ஐபிஎல் தொடரையும் தவறவிட்டார்.

காயத்தில் இருந்து திரும்ப வந்து மத்திய பிரதேஷ் அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்தியத் தேர்வுக்குழு எந்த தாமதத்தையும் ஏற்படுத்தாமல், உடனடியாக இவரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ரஜத் பட்டிதார் பேசும் பொழுது “இப்பொழுது நான் விதியை கொஞ்சம் நம்புகிறேன். விதியில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது குறித்து நான் அதிகம் யோசிப்பதில்லை. நிகழ்காலத்தில் என்னை வைத்துக் கொள்கிறேன். அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஐபிஎல் தொடரில் சதம் அடித்ததற்கு முன் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தேன். அந்தப் போட்டியில் நான் 12 ஓவர்களில் ஆட்டம் இழந்து விட்டேன். அப்பொழுதுதான் என்னால் ஐபிஎல் தொடரில் சதம் அடிக்க முடியும் என்பதையே உணர்ந்தேன். இதை நான் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் இடம் கூறினேன்.

சிறந்த வீரர்களை பார்த்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நிலையாக விளையாட கூடியவர்கள் டி20 கிரிக்கெட்டில் தங்களது ஆட்டத்தை பெரிதாக மாற்றிக்கொள்ள தேவையில்லை. வழக்கமான கிரிக்கெட் ஷாட்கள் மூலமாகவே ரன்கள் அடிக்க முடியும் என்பதைத்தான்.

என்னுடைய காயம் உடலின் மிக முக்கியமான தசை நாரில் ஏற்பட்டது. இதிலிருந்து முழுவதும் குணமடைய ஒன்றரை வருடங்கள் ஆகும். இதுவரை ஆறு ஏழு மாதங்கள் ஆகி இருக்கிறது. தற்பொழுது விளையாடலாம் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக மூன்று வருடங்கள் நான் வலியுடன்தான் விளையாடினேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்கும் இந்த நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. என்னால் இதோடு விளையாட முடியும். என்னால் சமாளிக்க முடியும் என்று எனக்குத் தெரியும்!” என்று கூறி இருக்கிறார்!