ஐபிஎல் இன் மினி ஏலமானது இன்று கொச்சியில் நடந்து முடிந்தது. இதில் ஏராளமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களும் ஆச்சரியப்படுத்தும் விலைக்கு அணிகளால் வாங்கப்பட்டனர்.
விவரந்த் சர்மா,முகேஷ் குமார், வியாஸ்,ஜெகதீசன்,ஷேக் ரஷீத் போன்ற இந்திய இளம் வீரர்களும் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்திய உள்நாட்டு அணிகளில் உள்ள இளம் வீரர்களுக்கும் ஏலத்தின் போது கடும் போட்டி இருந்தது. அப்படி ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வீரர் தான் தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன். இவர் நடந்து முடிந்த விஜய ஹசாரே போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்தார். மேலும் ஒரு போட்டியில் 277 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இந்த ஆண்டின் மினி ஏலத்தில் இவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 90 லட்சத்திற்கு வாங்கியுள்ளது . .
சிஎஸ்கே அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டவுடன் தனது ஐபிஎல் எதிர்காலமே முடிந்ததாக நினைத்த அவர் இந்த ஏலத்திற்கு பின் தன்னுடைய கடினமான நாட்களைப் பற்றி பேசியுள்ளார் . அதில் கூறிய ஜெகதீசன் சிஎஸ்கே அணி என்னை விடுவித்ததும் என்னுடைய ஐபிஎல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் என்னுடைய டி20 ஸ்ட்ரைக் ரேட் 118 தான்.எந்த ஒரு அணியும் இவ்வளவு குறைவாக ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் ஓபனிங் பேட்ஸ்மேன் எடுக்க மாட்டார்கள் . இதனால் இந்த இடத்தில் என்னை யாரும் வாங்க மாட்டார்கள். அதன் பிறகு இங்கிலாந்து சென்று இரண்டு மாதங்கள் லீக் கிரிக்கெட் ஆடலாம் என்று நினைத்திருந்தேன்” என்று தெரிவித்தார்.
எந்த ஒரு வீரராலும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஒரு அணியின் பெஞ்சிலேயே இருக்க முடியாது . அந்த காலகட்டத்தில் எனக்கு கிரிக்கெட் வேண்டாம் என்று முடிவு செய்து என்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போய் விடலாமா என்று கூட நிறைய முறை யோசித்து இருக்கிறேன் . ஆனால் எதையும் சாதிக்க வேண்டும் என்றால் நமக்கு பொறுமை அவசியம் என்பதை உணர்ந்து என்னுடைய கடின உழைப்பை நம்பி மீண்டும் அணியில் தொடர்ந்து இருக்கிறேன் . அது என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் மிகவும் கடினமான ஒரு காலம் என்றும் தெரிவித்தார் .
மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் சிஎஸ்கே அணியில் நான்கு ஆண்டுகள் பயணித்தாலும் இதுவரை வெறும் ஏழு போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறேன். ஒரு வீரராக பெஞ்சிலேயே அமர்ந்திருப்பது மிகவும் கடினமான ஒரு சூழலாகும். அது எந்த ஒரு வீரரையும் மனதளவில் சோர்வடையச் செய்து விடும் . அப்படி எனக்கு நிகழ்ந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் எனக்குள்ளேயே என்னை ஆறுதல் படுத்தி மனதை உறுதியாக்கி வைத்திருந்தேன். ஐபிஎல் என்பது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர், இங்கு ஏராளமான தரமான கிரிக்கெட் விளையாடுவார்கள். அதனால் வாய்ப்பு என்பது எளிதாக கிடைத்து விடாது. எந்த ஒரு சூழலிலும் கிடைக்கும வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கடினமாக உழைத்தேன் என்று தெரிவித்தார் .
தொடர்ந்து பேசியவர் இந்த வருடத்தின் செய்யது அலி முஸ்டாக் டி20 போட்டிகள் நான் எதிர்பார்த்தவாறு எனக்கு அமையவில்லை அதனால் விஜய் ஹசாரே போட்டிகளுக்காக என்னை தீவிரமாக தயார்படுத்திக் கொண்டு அதில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க முயற்சித்தேன். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. என்னுடைய அந்தத் தொடரின் ஆட்டம் தான் எனக்கு நம்பிக்கையை பெற்று தந்ததோடு இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று நம்புகிறேன்” என்று கூறினார் .
இந்த முறை ஆடும் லெவனில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியவர். எனக்கு கிடைக்கப் போகும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி என்னை நிரூபித்துக் காட்டுவேன். இந்த வாய்ப்பிற்காக தான் இவ்வளவு நாளாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் .
நாராயன் ஜெகதீசன் 2022 ஆம் ஆண்டின் விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி தொடரில் எட்டு ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 830 ரன்கள் குவித்தார். அதில் 5 சதங்கள் அடக்கம். இவரது சராசரி 138.33 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 277.