தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் 2024 ஆம் ஆண்டு நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் அரையிறுதியில் விளையாடிய இரண்டு தமிழக அணிகளும் வெளியேறிய பரிதாப நிகழ்வு நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு அணி இறுதிப் போட்டியை எட்டி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2024 புச்சி பாபு தொடரின் ஒரு அரையிறுதி போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடென்ட் லெவன் அணியும், இன்னொரு அரையிறுதி போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் அணியும் மோதின.
ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி 313 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடெண்ட் லெவன் அணி 327 ரன் குவித்து முன்னிலை பெற்றது. நான்கு நாள் போட்டி என்பதால், போட்டிக்கு முடிவு தெரியாவிட்டால் கூட முதல் இன்னிங்ஸ் முன்னிலையால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்கின்ற சாதகமான வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் ஐதராபாத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடென்ட் லெவன் அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஹைதராபாத் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
சத்தீஸ்கருக்கு எதிரான அரையிறுதி
இந்த போட்டியில் டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணியும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடி 467 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.
முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய முன்னிலை பெற்ற சத்தீஸ்கர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்தபோது நான்கு நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் அணி முன்னிலை பெற்று இருந்த காரணத்தினால் அதன் அடிப்படையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க : சும்மா கிடையாது.. ஒரு சீசன்ல 350 ஓவர்கள்.. நீங்க ரொம்ப சாதாரணமா பாராட்டுறிங்க – ரியான் பராக் பேச்சு
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தமிழ்நாட்டில் நடத்தும் குச்சி பாபு டெஸ்ட் தொடரில் இரண்டு தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அணிகளும் வெளியேறி இருப்பது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இறுதி போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன.