இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. இதில் டெல்லியைச் சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மிக முக்கியமான பங்கை கொண்டிருந்தார். மேலும் களத்தில் ஆக்ரோஷமான முறையில் விளையாடுவது அவருடைய பாணியாக இருக்கிறது. ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டங்களுக்கு பிறகு பேசி இருக்கும் அவர் இது குறித்து கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில், ஹென்றி கிளாசனை பேட்டிங்கில் வைத்துக் கொண்டு பதினோரு ரன்களை வைத்து, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார்.
மேலும் அதே போட்டியில் மயங்க் அகர்வால் வெளியேற்றி அவருக்கு ஆக்ரோஷமான முறையில் பறக்கும் முத்தத்தை கொடுத்தார். மேலும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரலை அவுட் செய்து ஆக்ரோஷமான முறையில் கொண்டாடி ஒரு போட்டியில் விளையாட தடையும் பெற்றார்.
தற்போது தனது ஆக்ரோஷம் குறித்து பேசி இருக்கும் அவர் “என்னுடைய ஆக்ரோஷத்தை நான் கைவிடுவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்தடுத்த முறைகளிலும் நான் இப்படித்தான் இருப்பேன். நான் மைதானத்திற்கு வெளியே ஒரு வேடிக்கையான பையன். ஆனால் நான் கிரிக்கெட் விளையாடுகின்ற பொழுது அப்படி கிடையாது. நான் இங்கு களத்தில் நண்பர்களை உருவாக்க வரவில்லை. நான் வெற்றி பெறுவதற்காகத்தான் வந்திருக்கிறேன்.
அபிஷேக் போரல் என்னுடைய முதல் ஓவரில் 16 ரன்கள் அடித்தார். அடுத்த ஓவரில் நான் அவர் விக்கெட்டை கைப்பற்றி ஆக்ரோஷமாக கொண்டாடினேன். அதற்கு நான் தடை செய்யப்பட்டேன். உங்கள் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்கும் பொழுது எப்படி சிரிக்க முடியும்?
இதையும் படிங்க : 3 மாசமா இந்த ஒரு விஷயத்தை கைவிட்டேன்.. அதான் டி20 உலக கோப்பைக்கு செலக்ட் ஆனேன் – சஞ்சு சாம்சன் தகவல்
டெல்லி வீரர்கள் ஆக்ரோஷமானவர்கள் என்ற டேக் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் டெல்லியில் இருந்து வரக்கூடியவர்கள் எங்கள் இதயத்தில் இருந்து நாங்கள் விளையாடுகிறோம். இந்த டெல்லியின் ஆக்ரோஷம் தான் விராட் கோலியை மாற்றி இருக்கிறது. இஷாந்த் சர்மாவை 100 டெஸ்ட் விளையாட வைத்திருக்கிறது. ரிஷப் பண்ட்டை காபா டெஸ்டில் சாதிக்க வைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.