ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இன்று இந்திய அணி தனது பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் வழக்கம் போல் ஹர்திக் பாண்டியா சிறப்பாக மீண்டு வந்து விளையாடுகிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா பேட்டிங் பவுலிங் கேப்டன்சி என எல்லாவற்றிலும் மோசமாக இருந்தார். மேலும் சொந்த அணி ரசிகர்களிடமும் பெரிய விமர்சனங்களைச் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் சர்வதேச அளவில் உலகக் கோப்பை என்று வரும்பொழுது ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என இந்திய முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அசத்தினார். இன்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 32 பந்தில் 53 ரன், சூரியகுமார் யாதவ் 18 பந்தில் 31 எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் சேர்த்தது.
இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஸ்டான்ஸ் எடுக்கும் பொழுது, ஒரு பினிஷர் போல பழையபடி மீண்டும் கால்களை கொஞ்சம் அகற்றி வைத்து கிரீசுக்குள் சென்று நின்றார். இதனால் அவருக்கு வழக்கம் போல் ஷாட் அடிப்பதற்கான இடம் நன்றாக கிடைத்தது.
கடந்த இரண்டு வருடத்திற்கும் பக்கமாக பொதுவான டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா ஒரு முழுமையான பேட்ஸ்மேன் போல மேல் வரிசையில் விளையாடி வந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவர் மேலே விளையாட வேண்டிய தேவை இருந்தது. இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்ய வரும் பொழுது கடைசிவரை விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் போல நேராக ஸ்டான்ஸ் எடுத்து நிற்பார். தற்பொழுது பினிஷர் ரோலுக்கு தகுந்தபடி அவர் மாறியது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.