பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருந்தாலும் கூட, தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் செல்லுமா செல்லாதா? என்பது குறித்து நிறைய விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பரபரப்பான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடினால் மட்டுமே இந்த தொடர் வெற்றி அடையும். இந்திய அணிக்கு இருக்கும் ரசிகர்களின் பலம் மிகப்பெரிய வருமானத்தை ஈட்ட கூடியதாக இருக்கிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாமல் ஐசிசி இந்திய அணி பங்கேற்பதை எதிர்பார்க்கிறது.
நடைமுறை எதார்த்தம்
தற்போதைய சூழ்நிலையில் ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதி வருகின்றன. மற்றபடி இரு அணிகளுக்கும் இடையே தனிப்பட்ட தொடர்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருகிறது.
அதே சமயத்தில் இந்தியாவில் ஐசிசி தொடர்கள் கடந்த இரண்டு முறை நடைபெற்ற பொழுதும் பாகிஸ்தான் அணி வந்து பங்கு பெற்று இருக்கிறது. தங்களுக்கான போட்டிகளை வெளியில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கேட்டது இல்லை. அதேபோல் தங்கள் நாட்டில் நடக்கும் ஐசிசி தொடரிலும் இந்திய அணி வந்து விளையாட வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை விரும்பவில்லை.
ஹர்பஜன் சிங் கருத்து
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் வெளியில் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என்பது அவருடைய விருப்பமாக கடந்த ஆண்டு முதலே தெரிவித்து வருகிறார்.
தற்போது இது பற்றி ஹர்பஜன் சிங் தெரிவிக்கையில் “பாகிஸ்தானை பொறுத்தவரை அவர்கள் சொல்வதுதான் அவர்கள் சரி என்று நினைக்கிறார்கள். நாங்கள் சொல்வது எங்களுடைய பார்வை. பாதுகாப்பு கவலைகள் எப்பொழுதும் இருப்பதாக உணர்கிறேன். பாதுகாப்பு குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றால் இந்திய அணி அங்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
இதையும் படிங்க : 286 ரன்.. சூரிய குமார் ஸ்ரேயாஸ் திட்டம் வீண்.. தமிழக அணியிடம் மும்பை சுருண்டு பரிதாப தோல்வி.. புச்சி பாபு 2024
பாகிஸ்தான் செல்லும் அணிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லை பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டால், இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்குதான் இருக்கிறது. ஏனென்றால் இது வெறும் கிரிக்கெட் மட்டுமே கிடையாது அதை தாண்டிய விஷயம். பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் கிடைக்காத வரையில் வீரர்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.