நடப்பு ஐபிஎல் தொடரில சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 11 புள்ளிகள் எடுத்து, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு புதிய அணியாக ஐபிஎல் தொடருக்குள் வந்தது. வந்த முதல் ஆண்டே ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று போட்டியின் கடைசி இரண்டு பந்தில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணியிடம் தவறவிட்டது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் வலிமையாக அந்த அணி செயல்படும் என்று எதிர்பார்த்து இருந்தபொழுது, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விரும்பி சென்று விட்டார். மேலும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முகமது சமி காயத்தின் காரணமாக விளையாட முடியவில்லை.
இதெல்லாம் சேர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்பாட்டை கடுமையாக பாதித்திருக்கிறது. அவர்கள் தற்போது 11 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள், சில போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய இடத்தில் இருந்து தோல்வியடைந்து இருக்கிறார்கள். அந்தத் தோல்விகளை வெற்றியாக மாற்றக்கூடிய வீரர்கள் அணியில் இல்லாமல் போயிருக்கிறார்கள்.
இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசும் பொழுது “மொத்தத்தில் நாங்கள் ஒரு போட்டியில் பின் தங்கியிருக்கிறோம். டெல்லிக்கு எதிராக நாங்கள் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். அதுபோன்ற ஒரு போட்டி எந்த வழியிலும் செல்லலாம். கடந்த இரண்டு வருடங்களில் இப்படியான நெருக்கமான போட்டிகள் எங்கள் வழியில் சாதகமாக முடிந்தது. ஒரு குறிப்பிட்ட போட்டியில் தோல்வியடைந்த இடம் என்பது, முக்கிய தருணங்களில் நம்மை நாம் தாழ்த்திக் கொண்ட இடமாகத்தான் இருக்கும்.
இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. உலகத்திலேயே நான் சந்திச்சதுல கஷ்டமான பவுலர் இவர்தான் – பாபர் அசாம் பேட்டி
ஹர்திக் பாய் திறமையான வீரர். அவர் எந்த அணியில் இருந்து வெளியேறினாலும், அது அந்த அணியின் காம்பினேஷனை பாதிக்கும். ஆனால் விளையாட்டின் அழகு என்னவென்றால், விளையாட்டு ஒரு வீரரால் மட்டுமே நடப்பதில்லை. நீங்கள் 16 ஆண்டுகளாக வெற்றி பெற்ற அணியை எடுத்துப் பார்த்தால், அங்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று வீரர்களால் ஒரு ஐபிஎல் சீசன் மொத்தத்திலும் மாற்றத்தை அந்த அணிக்கு உருவாக்கி இருக்க முடியாது. எல்லோரும் சேர்ந்து விளையாடிதான் வெற்றி பெற்று இருப்பார்கள். நாம் அதை நோக்கி தான் செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்