அடுத்த ஆண்டு 2025-ல் நடைபெறுகிற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எனஇந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த முறையும் ஐசிசி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தில் நடக்கிறது. ஆனால் முதல் முறையாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் 16ஆம் தேதி ரிசர்வ் நாளாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு முறை நடந்த சோகம்
முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டுவரப்பட்ட பொழுது அதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மோதியது. போட்டியை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பொழுதிலும் கூட, போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பு இன்றைய அணியின் கையில் இருந்தது. இருந்தும் இந்திய அணி தோற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தவறவிட்டது.
இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியது. அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் மோசமாக தோற்று இரண்டாவது முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தவறவிட்டது.
மாறுமா வரலாறு?
இந்த முறை இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்றாலும் கூட இந்திய அணிக்கு சாதகமான புள்ளி விபரங்கள் இருக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சச்சின் சாதனையை உடைத்த முஷீர் கான்.. 8வது விக்கெட்டுக்கு இன்னொரு ரெக்கார்டு.. துலீப் டிராபி 2024
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் கடந்த முறை தோல்வி அடைந்ததற்கு திருப்பி பதிலடி கொடுப்பதற்கான சரியான வாய்ப்பாக இந்திய அணிக்கு இருக்கும் என்றும் யூகிக்கிறேன். ஆஸ்திரேலியா உடன் மோதுவதால் இந்த முறை எல்லா தடைகளையும் தாண்டி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.