சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து, நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றார்கள். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இவர்கள் இருவரும் எப்பொழுது ஓய்வு பெறுவார்கள் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 36 மற்றும் 37 வயதில் இருக்கிறார்கள். எனவே இவர்களால் நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது என்பது தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் இவர்கள் எப்பொழுது ஓய்வு பெறுவார்கள் என்பது குறித்து தெரியாது.
ரோகித் சர்மா ஓய்வு
இவர்கள் இருவரும் ஓய்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்கின்ற நிலையில், இவர்களுக்கு மாற்று வீரர்களை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக திறமையான வீரர்களுக்கு உடனுக்குடன் வாய்ப்பு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு, சில வீரர்களுக்கு நீண்ட வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசி இருக்கும் சஞ்சய் பங்கர் “ரோஹித் சர்மா தனது உடல் மற்றும் உடல் தகுதி அனுமதிக்கும் வரையில் விளையாடுவார். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் தரம் கொண்ட வீரர். சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் உடல் தகுதி இருந்ததால் 40 வயது வரை விளையாடினார்கள். நிறைய உடல் தகுதி நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் வீரர்களை கவனித்துக் கொள்கிறார்கள். எனவே விளையாடும் காலம் அதிகரித்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
விராட் கோலி ஐந்து வருடம்
இவர் தொடர்ந்து விராட் கோலி பற்றி பேசுகையில் “வீரர்கள் நீண்ட காலம் விளையாடுவார்கள் அது அளிக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்றால் அதுபோல் சிறந்த விஷயம் எதுவும் கிடையாது. விராட் கோலி கடைசியில் ஓய்வு பெறும் வடிவமாக டெஸ்ட் கிரிக்கெட் இருக்கும். அவர் எப்படியும் குறைந்தபட்சம் இன்னும் 5 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப் போகிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம் வரவை விட செலவு அதிகம்.. தார் ரோடு பிட்ச்.. 12 புள்ளியும் போச்சு – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இன்றைய கிரிக்கெட் காலத்தில் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் உலகக்கோப்பை நடக்கிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறை ஐசிசி தொடர் வந்து விடுகிறது. இப்படி இருக்கும் பொழுது இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர இந்திய அணி வென்று இருந்தால் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.