18 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக பிசிசிஐ மீதம் உள்ள போட்டிகள் நடத்துவதை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இது குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கைவிடப்பட்ட ஐபிஎல் போட்டிகள்
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சி உள்ள ஐபிஎல் போட்டிகளை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. மேலும் இன்னும் ஒரு வாரத்தில் சூழ்நிலையை பார்த்து அதற்கு தகுந்தவாறு போட்டிகளை நடத்தும் மைதானம் மற்றும் தேதி என இரண்டையும் அறிவிப்பதாகவும் கூறி இருக்கிறது. ஆனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் யோசனை இருப்பதாக தனது கருத்தை கூறியிருக்கிறார். அதாவது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்தில் போதுமான அளவு மைதானங்கள் இருப்பதாகவும், மேலும் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையிலும் அது சிறப்பானதாக இருக்கும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
மைக்கேல் வாகன் யோசனை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் முடிக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு தகுந்தவாறு எங்களிடம் எல்லா இடங்களும் இருக்கின்றன. மேலும் இந்திய வீரர்களும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் தங்க முடியும். இது ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்தியா விட்டதை.. தென் ஆப்பிரிக்கா அணி செய்யும்.. ஆஸியை வீழ்த்துவோம் காரணம் இதுதான் – நோர்கியா சவால்
இருப்பினும் பிசிசிஐ வர்த்தகத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து சென்று நடத்த முடிவு செய்யுமா? அல்லது இந்தியாவிலேயே நிலைமை சீரான பின்னர் போட்டிகளை நடத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் பதட்டங்கள் அனைத்தும் சரி செய்யப்படும் நிலையில் பிசிசிஐ மீதமுள்ள போட்டிகளை நடத்த வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக முதல் பாதி போட்டிகள் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது பாதி போட்டிகள் துபாயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.