இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா ஒரு மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தாலும் அவருக்கு காயம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் போது காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நிலையில் அது இந்திய அணிக்கு பிரச்சனையாக முடிந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா குணமாகி டி20 வடிவ ஐபிஎல் தொடரில் விளையாடினார். தற்போது பாண்டியா டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த நல்ல உடல் தகுதி தேவை என்கிற நிலையில் இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட் கதவு இன்னும் திறந்து இருப்பதாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் விரிவாக கூறும்போது “தனிப்பட்ட முறையில் நான் எந்த கிரிக்கெட் வீரருக்கும் அவரது பாதையில் முடிவு இருப்பதாக காணவில்லை. நான் எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வந்தேன். அதுபோலவே தினேஷ் கார்த்திக் 10 வருடத்துக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் கண்டார். எனவே கிரிக்கெட் விளையாடுகிற வரை எந்த ஒரு வீரருக்கும் முடிவு இருக்காது. அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறாரா அல்லது இல்லையா என்பது ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட முடிவு.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தேர்வாளர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட ரஞ்சி அல்லது முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இதனால் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் முடிவு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஒழுங்கா விளையாட கத்துக்கோங்க.. அதுல இந்தியாவை குறை சொல்லாதிங்க.. ஆஸி இங்கிலாந்துக்கு கம்பீர் பதிலடி
பார்த்தீவ் பட்டேல் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். அதுபோலவே மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக 2004 முதல் 2010ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதேபோல பாண்டியா கடைசியாக 2018ஆம் ஆண்டு விளையாடிய நிலையில் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாக பார்த்திவ் பட்டேல் கருதுகிறார்.