61 ரன் 16 விக்கெட்.. உலக சாம்பியனை தோக்கடிச்சி இருக்கலாம்.. நீங்க அந்த லெவல் இல்ல.. இலங்கை மஹரூப் விமர்சனம்

0
16759

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து டி20 தொடரையும் இழந்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் பர்வீஸ் மஹரூப் இலங்கை அணியின் செயல்பாடு குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து முதலில் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயத்த 213 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 140 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அடுத்த 30 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த ஒன்பது விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது.

அதேபோல இரண்டாவது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 130 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்த போது அடுத்த 31 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இரண்டாவது போட்டியில் 180 ரன்கள் குவித்திருக்க வேண்டிய இலங்கை அணி 161 ரன்கள் மட்டுமே குவித்தது. இரண்டு போட்டிகளிலும் தொடக்கம் இலங்கை அணிக்கு கிடைத்த போதும் அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் சரியாக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர்.

- Advertisement -

இதனால் இந்த இரு போட்டியிலும் சேர்த்து 61 ரன்களுக்கு மொத்தமாக 16 விக்கெட்டுகளை இலங்கை அணி பறி கொடுத்திருக்கிறது. டி20 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்த நிலையில் பயிற்சியாளர், கேப்டன் என மாற்றங்களை கொண்டு வந்த போதிலும் இலங்கை அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது குறித்து முன்னாள் வீரர் பர்வீஸ் மஃரூப் தனது வேதனையை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியாவை வீழ்த்த இரண்டு நாட்களில் இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்புகள் இருந்த போதிலும், அணியின் தரம் சர்வதேச அளவில் போதுமானதாக இல்லை. உலகச் சாம்பியன்களை வீழ்த்த வலுவான நிலையில் இருந்த போதும் கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் வீணடித்து இருப்பது பரிதாபமான உணர்வாக உள்ளது”என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:என் மருமகன் ஷாகினுக்காக நான் இதை செய்யல.. உண்மையில் நடந்தது இதுதான் – ஷாகித் அப்ரிடி விளக்கம்

இனி மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியிலாவது இலங்கை அணி தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கௌதம் கம்பீர் தலைமையின் கீழ் செயல்படும் இந்திய அணியும் தொடரை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

- Advertisement -