“நீ கேப்டனானு எல்லாரும் கேலி செஞ்சாங்க.. அஷ்வின்தான் எங்களை நம்பினார்!” – 44 வயது இம்ரான் தாஹிர் உருக்கமான பேச்சு!

0
18650
Ashwin

இந்த ஆண்டு தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரை, 44 வயதான தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர் தலைமையில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல்முறையாக வென்று இருக்கிறது!

இம்ரான் தாஹிர் ஓய்வு பெற்று உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு மட்டும்தான் வயது ஒரு பிரச்சினையாகவே இருந்தது கிடையாது. இந்த வகையில் இம்ரான் தாஹிர் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

- Advertisement -

இவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டங்கள் வென்ற காலக்கட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இவர் வெளிநாட்டு வீரர் என்பதால் ஒரு கட்டத்தில் அணிக் கலவையில் சிரமங்கள் உருவானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவில்லை.

ஆனால் இவரது திறமை குறைந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. அற்புதமான லெக் பின்னரான இவரால் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் திருப்புமுனையை கொண்டு வர முடியும். இதையெல்லாம் தாண்டி 44 வயதில் கரீபியன் பிரிமியர் டி20 லீக் போன்ற பெரிய தொடரில் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது மிகப்பெரிய விஷயம்.

இது குறித்து உணர்ச்சி பொங்க பேசியுள்ள இம்ரான் தாஹிர் அனலைஸ்ட் பிரசன்னா மற்றும் அஸ்வின் இருவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார். பிரசன்னா அஸ்வின் உடைய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இம்ரான் தாஹிர் கூறும் பொழுது
“இந்த அணிக்காகவும் எங்களை ஆதரிக்க வருகின்ற அழகான மக்களுக்காகவும் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானது. நான் இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பொழுது பலர் அதைக் கேலி செய்தார்கள். ஆனால் எனக்கு அதுதான் உந்துதலாக இருந்தது. நான் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் அனலைஸ்ட் பிரசன்னாவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் தினமும் 20 மணி நேரம் உழைத்து, அனைத்து திட்டங்களையும் எனக்கு கொடுத்து வந்தார். நான் அவருக்கு உண்மையில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

அதே வேளையில் இந்தச் சமயத்தில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் அவர்தான் இந்தத் தொடர் ஆரம்பத்திலேயே, எங்களால் இந்தத் தொடரை வெல்ல முடியும் என்று கூறியிருந்தார்.

நான் சாதிக்க நினைத்த ஒன்றை சாதிக்க உதவியாக இருந்த எனது குழுவினர் அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான பயணம். இந்தப் பயணத்தில் இருந்த எல்லோருக்கும் எனது நன்றிகள்!” என்று மிக உருக்கமாகக் கூறியிருக்கிறார்!