இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியும் தற்போது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு தான் பேசிய கருத்துக்களை மக்கள் தவறாக எடுத்துக்கொண்டதாக மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு பிறகு சில முக்கிய கருத்துக்கள் பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஹாரி புருக் தாங்கள் அதிரடியாக விளையாடிய ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு விளையாடுவதாகவும், அதனால் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆவது குறித்து கவலைப்பட மாட்டோம் என்று பேசி இருந்தார்.
இது குறித்து அதற்கு தனது கருத்தைத் தெரிவித்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நீடித்தால் தான் பேசியதற்கு சில காலம் கழித்து வருத்தப்படுவார் என்றும், ஒரு கேப்டன் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் எனவும் சில கருத்துக்கள் பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் புரூக் பேசியது வைரல் ஆனதை தொடர்ந்து அதற்கான தெளிவான விளக்கத்தை மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் தெளிவாக கூறும்போது “மக்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக தவறாக புரிந்து கொண்டனர்.நீங்கள் வெளியே சென்று பயமின்றி விளையாட வேண்டும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும், நாங்கள் தோல்வியடைந்தால் அது யாருக்கும் கவலை இல்லை என்பது கிடையாது.
நாங்கள் இன்னும் வெற்றி பெறவே விரும்புகிறோம். நீங்கள் பயத்தை விட்டு வெளியே வந்து விளையாட வில்லை என்றால் அந்த பயமே நம்மை சீக்கிரம் அவுட் ஆக்கிவிடும். டெஸ்ட் கிரிக்கெட் சூழலில் மக்கள் மைதானத்தை விட்டு பலமுறை வெளியேறுவதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே நீங்கள் அச்சமின்றி விளையாடும் அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் மேலும் அதை பந்துவீச்சாளர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் ஜெய்ஸ்வால்.. விராட் ரோகித்துக்கு சரிவு.. கில்லும் முன்னேற்றம்
இந்த இரண்டு அணிகளுக்கிடையான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், அடுத்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த வரும் இரண்டு போட்டிகளும் இரண்டு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக கருதப்படுகிறது.