“ஈஸியா ஜெயிச்சுட்டோம்.. ஆட்டம் ஆரம்பத்தில் இருந்து எங்க கையிலதான் இருந்துச்சு!” – ஆப்கானிஸ்தான் கேப்டன் அதிரடியான பேச்சு!

0
742
Afghanistan

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தொடரில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆக இருக்கும் இங்கிலாந்து அணியை டெல்லியில் வைத்து வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆப்கானிஸ்தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் உதவி உடன் 282 ரன்கள் 50 ஓவர்கள் முடிவில் எடுத்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இரண்டு ஓவர்களை மீதம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில், உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக வீழ்த்தியது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இது முதல் வெற்றியாகும்.

ஒரே உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பெரிய அணியான பாகிஸ்தான் இரண்டையும் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இருப்பதோடு, நடப்பு உலகக்கோப்பை தொடருக்கும் பெரிய சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. ஒரு தலைபட்சமாக உலகக் கோப்பை முடிவதை தடுத்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆப்கானிஸ்தான் தனக்கு இருக்கும் போட்டிகளில் எப்படி செயல்படும் என்கின்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இன்னும் குறைந்தபட்சம் ஒரு அதிர்ச்சியை யாவது யாருக்காவது கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசி உள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி கூறும் பொழுது “இந்த வெற்றியின் சுவை நன்றாக இருக்கிறது. இன்று நாங்கள் இலக்கை துரத்திய விதம் மிகவும் தொழில்முறையாக இருந்தது. சில வருடங்களாக நாங்கள் தரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்.

நேர்மறையான கிரிக்கெட்டை விளையாட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இதுபோல மேலும் பலவற்றை செய்வோம். எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சு. நூர் அகமதுக்கு முதல்முறையாக ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவர் யார் என்று காட்டினார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!