உத்திரபிரதேச டி20 கிரிக்கெட் லீக் திருவிழா தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் கோரக்பூர் லயன்ஸ் அணியின் ருத்ர தாண்டவத்தால் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி தவிடுபொடியானது. இதில் கோரக்பூர் அணியின் ஆரியன் ஜூரேல் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறார்.
இந்தியாவில் உத்தரப்பிரதேச டி20 கிரிக்கெட் லீக் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் துருவ் ஜூரேல் கேப்டனாக தலைமை வகிக்கும் கோரக்பூர் லைன்ஸ் அணியும், நித்திஷ் ராணா தலைமையிலான நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லைன்ஸ் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஆரியன் ஜூரேல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார். அவருக்கு பிறகு அடுத்தபடியாக கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரேல் தனது பங்குக்கு 46 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரது அதிரடியின் மூலம் கோரக்பூர் அணி பெரிய இலக்கை நொய்டா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி கோரக்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இதில் பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசிய சிவம் சர்மா நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் கோரக்பூர் அணியின் கேப்டனாக திகழும் துருவ் ஜுரேலின் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் படியாக அமைந்துள்ளது. ஏனென்றால் இவர் கேப்டன் ஆக அணியை வழி நடத்துவது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20ல் முதல் முறை.. இந்தியா ஆப்கான் அணிகளை தாண்டி ஸ்பெயின் வரலாற்று சாதனை.. யாராலும் ஜெயிக்க முடியல
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி ஒருவேளை ஓய்வு பெற்றால் விரைவில் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் துருவ் ஜூரேல் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. எனவே அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக சிஎஸ்கே அணிக்கு வர பொருத்தமான இந்திய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிஎஸ்கே அணி இதனை கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.