பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி20 போட்டியில் சிஎஸ்கே வீரரும் வங்கதேச வீரருமான முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு சர்வதேச அணியும், மற்ற அணிகளோடு டி20 தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், முழு வீச்சில் அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் மூன்று போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்த நிலையில் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்த நிலையில் பேட்டிங் தொடங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.
டான்சிட் ஹாசன் 37 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 52 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சௌமியா சர்க்கார் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என 41 ரன்கள் குவித்தார். இந்த தொடக்க ஜோடியை தவிர பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மருமனி 14 ரன்களிலும் பென்னெட் ஜீரோ ரன்னிலும் வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு ஜிம்பாப்பே அணியின் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த அணியில் அதிகபட்சமாக கேம்ப்பெல் மட்டும் 27 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்
இதனால் 19.4 ஓவரில் ஜிம்பாப்வே அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஸ்தபிகுர் ரகுமான் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ஜிம்பாப்வே அணியுடனான சர்வதேச தொடரின் காரணமாக சென்னை அணியை விட்டு விலகினார். அவர் விலகியதில் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவுக்காக ரோஹித் சர்மா இதை ஏன் செய்யல?.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க – ஆரோன் பின்ச் பேச்சு
இவரும், பத்திரானாவும் இல்லாத காரணத்தினால், நேற்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 231 ரன்கள் விட்டுக் கொடுத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஜிம்பாப்வே அணியின் மிடில் வரிசையில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேஷ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இவர் தற்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை அணியில் இவர் இல்லாதது ரசிகர்களை தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது