ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான முறையில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அணியின் செயல்பாடு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மோசமான நிலையில் சிஎஸ்கே
நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய பாணியிலேயே பேட்டிங் வீரர்களை தேர்வு செய்து இந்த ஐபிஎல் தொடரில் களம் இறங்கியது. ஆனால் மற்ற அணிகளின் பேட்டிங் வரிசை அதிரடியான பவர் ஹிட்டிங் வீரர்களோடு இருந்ததால் சென்னை அணியால் அவர்களை எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிகள் தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைமையில் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது ஏறக்குறைய முடிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட சிஎஸ்கே சிஇஓ சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே சிஇஓ நம்பிக்கை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த வருடம் சிஎஸ்கேவின் செயல் திறனை பார்த்து நீங்கள் அனைவரும் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இது நீண்ட வருடத்திற்கு பிறகு நடக்கிறது. இதற்கு முன்பு நாங்கள் மிகச் சிறப்பான நிலையில் விளையாடியிருந்தோம். நாங்கள் இப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நமது அணியில் சிவம் தூபே போன்ற திறமையான வீரர் இருக்கிறார்.
இதையும் படிங்க:உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் பெரிய ஆள்தான்.. தமிழக வீரர்களை ஊக்கப்படுத்த.. சிஎஸ்கே வீரர் செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
அவர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சிஎஸ்கேவில் ‘தல’ போன்ற ஒருவர் நமக்கு கேப்டனாக இருப்பதால் கம் பேக் என்பது வெகு விரைவாக நடக்கும். நிச்சயமாக 2010 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்து அதற்கு பின்னர் கோப்பையை வென்றதை நாங்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம். அதுதான் நாங்கள் ஐபிஎல் பட்டத்தை வென்ற முதல் வருடம். எனவே சிறுவர்கள் அர்ப்பணிப்புணர்வுடன் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்” என சிஇஓ கூறி இருக்கிறார்.