இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இன்று அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மயங்கி யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அறிமுகமானார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு திரும்பினார்.
பங்களாதேஷை பவுலிங்கில் அடக்கிய இந்தியா
பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த மெகதி ஹசன் மிராஸ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ 25 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில் 127 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
சிறிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 11.5 ஓவரில் இலக்கை மூன்று விக்கெட்டை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள், ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள்.
நல்ல தலைவலி ஒன்னு இருக்கு
வெற்றி குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் எங்களுடைய திறமைகளை ஆதரிக்க முடிவு செய்தோம். நாங்கள் எங்களுடைய அணி கூட்டத்தில் என்ன முடிவு செய்தோமோ அது எங்களுக்கு நல்ல முறையில் பயன் அளித்து இருக்கிறது. எங்களுடைய வீரர்கள் புதிய மைதானத்தில் விளையாடுவதும், அவர்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க: வெறும் 11 ஓவர்.. வருண் சக்கரவர்த்தி ஹர்திக் பாண்டியா அதிரடி.. இந்திய அணி பங்களாதேஷை வென்றது
“தற்போது எங்கள் அணியில் 8 பந்துவீச்சு ஆப்ஷன்கள் இருக்கிறது. யாரைப் பந்து வீச சொல்வது என்பது களத்தில் கேப்டனாக எனக்கு ஒரு நல்ல தலைவலியாக இருக்கிறது. இவ்வளவு வீரர்கள் பந்து வீசும் படி இருப்பது நல்ல விஷயம். ஒவ்வொரு போட்டியுமே நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். நாங்கள் இந்த போட்டியில் இருந்து சில பகுதிகளை மேம்படுத்துவோம்” என்று கூறி இருக்கிறார்.