சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார் பென் ஸ்டோக்ஸ்!

0
2493
Stokes

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சீசனாக அமைந்தது. 10 அணிகள் பங்குபெற்ற கடந்த சீசனில் ஒன்பதாவது இடத்தையே புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிடிக்க முடிந்தது!

இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் அணியை மாற்றி கட்ட வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. இதனால் மூத்த வீரர்களான பிராவோ மற்றும் உத்தப்பா ஆகியோரை கழட்டிவிட்டு புதிய அணியை கட்ட தீர்மானித்தது.

- Advertisement -

இதன்படி மினி ஏலத்தில் 16.25 கோடிக்கு போய் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். இவரது அனுபவம் மற்றும் பேட்டிங் பந்துவீச்சு சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் முழங்காலில் இருக்கும் காயத்தின் பிரச்சினையால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது சந்தேகம் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவர் பந்து வீசாவிட்டால் சென்னை மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவது கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் லக்னோ அணிக்கு எதிரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பவர் பிளேவில் ஒரு ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியை தந்தது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பென் ஸ்டோக்ஸ் ” இது மிகவும் விரக்தியான ஆண்டாகும். இந்த முழங்கால் பிரச்சனையுடன் பந்து வீசுவது, நான்காவது பந்துவீச்சாளருக்கான எனது பங்களிப்பை சரிவர செய்ய முடியாமல் போனது என மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நான் இப்போது இருக்கும் இடத்திற்கு மிகவும் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். லக்னோ அணிக்கு எதிராக வலியில்லாமல் பந்து வீசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கடின உழைப்பால் ஒரு ஓவரை முழங்கால் வலி இல்லாமல் வீசி முடித்தேன்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“தற்பொழுது எல்லாம் நன்றாக நடக்கிறது. ஆனால் இதற்காக அவசரப்பட்டு அதிகம் செய்யக்கூடாது. இதை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆசஷ் தொடரில் நான்காவது பந்துவீச்சாளராக எனது பங்களிப்பை நான் இங்கிலாந்து அணிக்கு செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டொரு ஓவர்கள் அவர் வீசுவது உறுதியாகி இருக்கிறது!