ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வந்து வீசிய பும்ரா ஏழு ரன் மட்டும் விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் பும்ரா பற்றி அக்சர் படேல் போட்டி முடிவுற்ற பிறகு பேசி இருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரையில் பும்ரா நான்கு போட்டிகளில் 15 ஓவர்கள் பந்து வீசி, 2 மெய்டன்கள் செய்து, 52 ரன்கள் மட்டுமே விட்டு தந்து, 3.46 எக்கானமியில் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவர் பந்துவீச்சில் கொண்டு வரும் உலகத்தரம் இந்திய கேப்டனுக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பும்ரா பற்றி பேசியிருக்கும் அக்சர் படேல் கூறும்பொழுது “பும்ராவின் பந்துவீச்சு குறித்து அணியில் யாரும் அதிகம் பேசுவது கிடையாது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று அவருக்கு சரியான யோசனை இருக்கிறது. எனவே அவர் மிகச் சரியாக இருக்கின்ற காரணத்தினால் எங்களின் பந்து வீச்சு பயிற்சியாளர் அவருக்கு ஐடியா கொடுப்பதில்லை.
உங்களுடைய பந்துவீச்சில் ஏதாவது குழப்பம் இருந்தால் உங்களுக்கு ஏதாவது யோசனை சொல்லலாம். ஆனால் பும்ரா மிகத் தெளிவாக இருக்கிறார். இதன் காரணமாக எங்கள் பந்துவீச்சு பயிற்சியாளர் ‘ உங்கள் மனதில் உள்ளதை செய்யுங்கள். உங்கள் மனம் தெளிவாக இருக்கிறது. எனவே உங்கள் திட்டத்தை களத்தில் செயல்படுத்துங்கள்’ என்று மட்டுமே கூறுகிறார்.
பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். எங்கள் பவுலிங் யூனிட்டில் தரத்தின் காரணமாக எங்களால் எந்த போட்டியிலும் வெளியேறி வர முடியும். நீங்கள் இங்கு தனி ஒருவராக உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். நான் இந்த ஆடுகளத்தில் இரண்டு பந்துகள் வீசியதுமே என்ன நீளத்தில் வீச வேண்டும் என புரிந்து கொண்டேன்.
இதையும் படிங்க : ஹாட்ரிக் எடுத்ததுல பெரிய சந்தோசம் இல்ல.. அதுல இதுதான் எனக்கு முக்கியமான விஷயமா இருந்தது – பாட் கம்மின்ஸ் பேட்டி
பும்ரா மறுமுனையில் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பது பற்றி நான் பார்க்கவில்லை. நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் மீது அழுத்தம் ஏற்றுக் கொள்வேன். நான் என்னுடைய சிறந்ததை எப்படி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது அதன்படி நான் செயல்பட்டேன்” என்று கூறியிருக்கிறார்.