தற்போது ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணி உடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் டி20 தொடர் சமநிலையில் முடிய, ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருந்தது.
ஆஸி அலெக்ஸ் கேரி அதிரடி
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 29, டிராவிஸ் ஹெட் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் மிட்சல் மார்ஸ் 59 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஸ்மித், மேக்ஸ்வெல், லபுசேன் என நட்சத்திர வீரர்கள் பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் கேரி சிறப்பாக விளையாடி 67 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவரில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
பலவீனம் வெளிப்பட்ட இங்கிலாந்து
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 49 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக துவக்க ஆட்டக்காரர் பென் டக்கேட் 32 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து அணி 40 புள்ளி இரண்டு ஓவரில் 22 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சல் ஸ்டார்க் 3, ஹேசில்வுட், மேக்ஸ்வெல் மற்றும் ஆரோன் ஹார்டி தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் ரொம்ப ஈஸி.. டி20 ஆடுறது கஷ்டம்.. இந்த ஒரு காரணம் கேட்டா புரியும் – ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் பேட்டி
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு சாதகம் இருந்தாலே அதை எதிர்த்து இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடிவதில்லை. இந்த போட்டியிலும் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையே காணப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் தோற்றது.