இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி வலிமையான இடத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வெல்ல இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ஹசன் மக்முத் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
சீட்டுக்கட்டு போல் சரிந்த பங்களாதேஷ் அணி
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய சோதனையை கொடுத்தார்கள். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்தியாவின் உலகத்தரமான பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
பங்களாதேஷ் அணி பரிதாபமாக தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. பங்களாதேஷ் அணிக்கு ஷாகிப் அல் ஹாசன் 32, மெஹதி ஹசன் மிராஸ் 27*, லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 4, சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
ஒரே நாளில் 17 விக்கெட்
இதற்கு அடுத்து பெரிய முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 13, விராட் கோலி 17 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஏமாற்றம் தந்தார்கள்.
இதையும் படிங்க : டி20 WC ஸ்டைலில்.. ஐபிஎல் கோப்பைய வெல்ல டிராவிட் மாஸ் பிளான்.. கோச்சானதும் முதல் முடிவு
இதைத்தொடர்ந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் களத்தில் நின்ற சுப்மன் கில் 33, ரிஷப் பண்ட் 12 பார்த்துக் கொண்டார்கள். இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இருக்கிறது. மேலும் இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைக்கு இந்திய அணியின் கையே இந்த டெஸ்ட் போட்டியில் மேலோங்கி இருக்கிறது.