நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகளில் தோல்வி என புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஆன அர்ஸ்தீப் சிங் தனது அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பஞ்சாப் அணியில் 7 வருடம்
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக அர்ஸ்தீப் சிங் திகழ்ந்து வருகிறார். கடந்த 7 வருடங்களாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் நிலையில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியில் இடம் பெற்றார். மேலும் சர்வதேச வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பஞ்சாப் அணி இவரை இந்த வருடம் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அர்ஸ்தீப் சிங் பஞ்சாப் அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். அணிக்குள் விளையாட ஆரம்பித்த சில காலங்களிலேயே தான் மூத்த வீரர் போல உணரப்பட்டதாகவும், பெரிய தவறுகள் செய்ய வாய்ப்பில்லை எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஒரு மூத்த வீரரை போல உணர்ந்தேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வந்ததிலிருந்து முதல் வருடத்தை தவிர எனது சீனியாரிட்டியை உணர ஆரம்பித்தேன். கடந்த 7 வருடங்களாக நான் இந்த அணியுடன் தொடர்புடையவன், முதல் வருடத்தை தவிர எனக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணர ஆரம்பித்தேன். என்னுடைய பதவி உயர்வு மற்றும் வளர்ச்சி என்பது மிக விரைவாக வந்ததாகும்.
இதையும் படிங்க:இந்திய அணி பயிற்சியாளர் குழு கூண்டோடு நீக்கம்.. யாருக்கு பறிபோனது பதவி.. வெளியான புதிய தகவல்கள்
முக்கியமான கட்டங்களில் நான் தவறு செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தேன். ஏனென்றால் அந்த சூழ்நிலையில் திட்டத்தின்படி வேலை செய்யாமல் இருந்தால் அணியை கடுமையான சிக்கலில் தள்ளும். எனவே நான் தீவிரமான மனநிலைக்கு மாறி சீக்கிரமாகவே ஒரு மூத்த வீரரை போல உணர ஆரம்பித்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த புள்ளியையும் தாழ்ந்த புள்ளியையும் நான் கண்டிருக்கிறேன். என்னை பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களால் நான் மகிழ்ச்சியே அடைந்து இருக்கிறேன். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் மீம்ஸ்களை பார்த்து நான் ரசிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.