இங்கிலாந்து கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் மிகவும் புகழ்பெற்றவர் ஆண்ட்ரூ பிளின்டாப். தற்போது 46 வயதாகும் இவருக்கு 16 வயதில் ராக்கி பிளின்டாப் என்ற மகன் இருக்கிறார். இவர் தற்போது இங்கிலாந்து அண்டர் 19 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்து, இங்கிலாந்து அண்டர் 19 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.
ஆண்ட்ரூ பிளின்டாப் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட், 114 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஏழு டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இத்தோடு 400 சர்வதேச விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.
இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமாக 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு வந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்து இவர் சட்டையை கழட்டி சுழற்றியது பிறகு கங்குலி திருப்பி செய்ததை எல்லாம் வரலாறு.
இந்த நிலையில் 16 வயதான இவரது மகன் இங்கிலாந்து அண்டர் 19 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையைப் படைத்திருக்கிறார். தற்பொழுது இலங்கை அண்டர் 19 அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அண்டர் 19 அணி 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அண்டர் 19 அணியின் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த ராக்கி பிளின்டாப் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவின்போது 82 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
தொடர்ந்து மூன்றாவது நாளில் விளையாடிய அவர் மொத்தம் 181 பந்துகள் சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அண்டர் 19 அணி 477 ரன்கள் குவித்தது. அந்த ஹம்சா ஷேக் 107 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : ஜெயவர்தனாவின் ரெக்கார்டை முறியடித்த ஜோ ரூட்.. சச்சினின் கிரேட் சாதனையை பிரேக் செய்யவும் வாய்ப்பு
ஆண்ட்ரூ பிளின்டாப்பின் மகன் ராக்கி பிளின்டாப் 16 வயதில் இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு சதம் அடித்து, இங்கிலாந்து அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் தான் சீக்கிரத்தில் ஓய்வு பெற்று தவறான முடிவு எடுத்து விட்டதாக பிளின்டாப் கூறியிருந்தார். தற்பொழுது தனது மகன் மூலமாக அந்தத் தவறை சரி செய்து கொள்கிறார்!