30 பந்துகளில் 61 ரன்களை அடிக்க உதவியது இந்த இந்திய வீரர் தான் – ஆட்டநாயகன் கேமெரூன் கிரீன் பேட்டி!

0
5686

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இது முன்னோட்டமாகும்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க ஜோடி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ரோகித் சர்மா 11 ரன்களுக்கு அவுட் ஆனார். விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 55(35) ரன்களுக்கு வெளியேறினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 46(25) ரன்கள் எடுத்தார். 5வது வீரராக வந்த ஹர்திக் பாண்டியா ஆட்டம் இந்தியாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. 30 பந்துகளில் 5 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களை விளாசினார். இந்திய அணியின் ஸ்கொர் 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்களில் முடிவில் 208 குவித்தது.

- Advertisement -

இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் களம் இறங்கினார்கள். சற்று கடினமான இலக்கு என்பதால் முதல் ஓவரில் இருந்தே டாப் கியரில் விளையாடினர். பின்ச் 22 ரன்களுக்கு அவுட் ஆனார். இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து, 30 பந்துகளில் 4 சிக்ஸர் 8 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் அடித்தார்.

கிரீன் அக்சர் படேல் ஓவரில் ஆட்டமிழக்க, உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிட் இருவரும் இந்திய அணியின் வெற்றி கனவை சிதைத்து விட்டார்கள். மேத்யூ வேட் 21 பந்துகளில் 45 ரன்களை இரண்டு சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் நொறுக்கி இறுதிவரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சிறப்பாக விளையாடிய கேமெரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “என்னை மிகவும் கீழ் வரிசையில் இறங்கி வந்தார்கள். இது குறித்து நான் பின்ச் வசம் பேசினேன். அதற்கு அவர் என்னை அமைதி காக்கும் படியும், சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறினார். திடீரென்று எனக்கே தெரியாமல் இன்றைய போட்டியில் துவக்கும்படி கூறினார்கள். எனது ஆட்டத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மிகச் சிறப்பாக இருந்தது. அதை வைத்து தான் எனது ஆட்டத்தை நான் துவங்கினேன். ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இனிவரும் போட்டிகளில் நான் துவக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.

- Advertisement -