நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதேவேளையில் பெரிய அணியான நியூசிலாந்து அணியை வெளியேற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதற்கான முக்கியமான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் ரஷீத் கான் பேசியிருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் உகாண்டா அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்து அந்த அணியை 58 ரன்னில் சுருட்டி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிய ரன் ரேட் கிடைத்துவிட்டது.
இதற்கு அடுத்து மிக முக்கியமாக நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் எடுத்தது. அதே சமயத்தில் பந்துவீச்சில் அட்டகாசமாகச் செயல்பட்டு நியூசிலாந்து அணியை 75 ரன்களில் சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஏறக்குறைய இந்த இடத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இதற்கு அடுத்து இன்று பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக அந்த அணியை 95 ரன்கள் சுருட்டி, 15.1 ஓவரில் இலக்கை எட்டி மூன்றாவது வெற்றியை பெற்று, அடுத்த சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. மேலும் உலகெங்கும் நடக்கும் பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளில் விளையாடுவது ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ரஷித் தான் கூறியிருக்கிறார். இந்த வசதி இந்திய வீரர்களுக்கு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட விடுவதில்லை என்பது முக்கியமானது.
வெற்றிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் “வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும். என்பது குறித்து நன்றாகத் தெரியும். பவர் பிளேவில் தைரியமாக விளையாடும் குர்பாஸ், பந்துவீச்சில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுக்கும் பரூக்கி போன்றோர் மிகவும் முக்கியம். எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு போட்டியில் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். இன்று மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய நேரம் கிடைத்தது.
இதையும் படிங்க : சூப்பர்-8 சுற்று.. இந்திய அணி மோதும் அணிகள்.. இடம் மற்றும் தேதி.. முழு உத்தேச விபரங்கள்
இங்கு வருவதற்கு முன்பு நாங்கள் எங்களுடைய நாட்டில் ஒரு போட்டி விளையாடினோம். மேலும் எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். பிரான்சிசைஸ் லீக்குகள் விளையாடுவதின் வசதி இதுதான். நீங்கள் உலகெங்கும் விளையாடுவதால் உங்களுக்கு அங்குள்ள நிலைமைகள் தெரியும். நபி மற்றும் குர்பாஸ் இருவரும் செயின்ட் லூசியாவில் விளையாடுகிறார்கள். அடுத்து நாங்கள் அங்கு செல்கிறோம். அவர்கள் எங்களுக்கு அங்குள்ள நிலைமைகள் குறித்து தெளிவாகச் சொல்லுவார்கள். இது எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நாங்கள் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்துவோம்” என்று கூறியிருக்கிறார்.