இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இழந்து நாடு திரும்பியது!
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாடுகிறது!
இதில் முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடருக்கான முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதென தீர்மானித்தது.
இந்திய அணியில் ஒருபுறம் விக்கட்டுகள் சீராக சரிந்து கொண்டிருக்க, துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய 23 வயது இளம் வீரர் கில் 208 ரன் இரட்டை சதம் அடித்து அசத்தி குறைந்த வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஆறு விக்கட்டுகள் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை. ஏழாவது விக்கட்டுக்கு 131 ரன்னுக்கு ஜோடி சேர்ந்த பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் இருவரும் அதிரடியாக விளையாடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றியை மிரட்டினார்கள். குறிப்பாக பிரேஸ்வெல் 57 பந்தில் சதம் அடித்து அதிர்ச்சியை கொடுத்தார்.
ஆட்டம் நியூசிலாந்து பக்கம் இருக்க 46 ஆவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் அந்த ஓவரில் சான்ட்னர் 57 ரன், சிப்லி 0 ரன் என இருவரையும் வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். இறுதியாக நியூசிலாந்து அணி ரன்கள் எடுக்க இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து அணி தரப்பில் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்து இறுதி விக்கட்டாக ஆட்டம் இழந்தார். இந்தியா அணி தரப்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.