இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பையை கைப்பற்றியது மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டுதான். அதற்கு பிறகு இதுவரை இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடர்களில் பெரிய வெற்றிகள் என்று எதுவும் கிடைக்கவில்லை!
இந்தியா கடைசியாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிய தொடரின் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை அடைய மிக முக்கிய காரணமாக இருந்தவர் கம்பீர்!
இந்திய அணி ரன் கணக்கை துவங்கும் முன்பே வீரேந்திர சேவாக் ஆட்டமிழக்க அதற்கு அடுத்து களத்திற்கு வந்த கம்பீர் 223 ரன்கள் இந்திய அணிக்கு கிடைக்கும் வரை விளையாடி 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது இந்த ஆட்டம் இந்திய அணியை உலகக் கோப்பையை சுலபமாக எட்டிப் பிடிக்க வைத்தது.
தற்பொழுது கம்பீர் கிரிக்கெட் வர்ணனையாளராக பல முக்கிய அதிரடி கருத்துகளை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த வகையில் தான் கிரிக்கெட்டுக்காக எப்போது அழுதேன் என்பதை கூறி உள்ளார்.
இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது
” நான் கிரிக்கெட்டுக்காக அழுதது ஒரே ஒரு முறை தான். அது ஆஸ்திரேலியாவில் 1992 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு ரன்னில் தோற்ற பொழுது நான் அழுதேன். அந்தத் தோல்வி எனக்கு இப்பொழுது வரை நினைவிருக்கிறது. அதற்குப் பிறகு நான் உலகக் கோப்பையை வென்ற பொழுது கூட அழவில்லை!” என்று கூறி இருக்கிறார்!