இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியும் இலங்கை அணியும் மோதிக்கொண்ட போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.
இரண்டு அணிகளும் தங்களின் முதல் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று மோதிக் கொண்டன. எனவே இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் குஷால் மெண்டிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இலங்கை அணியில் பதிரனா இடத்தில் லகிரு குமாரா மற்றும் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய கேப்டன் சனகா இடத்தில் சமிக கருணரத்னே இடம்பெற்றார்கள்.
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அந்த அணிக்கு மிகச் சிறப்பான துவக்கமளித்தார்கள். இருவருமே அரை சதம் கடந்தார்கள். பதும் நிசங்கா 67 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் விக்கட்டுக்கு இலங்கை 125 ரன்கள் சேர்த்தது. இதற்கு அடுத்து மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து அந்த அணி மேற்கொண்டு 52 ரன்கள் மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து, 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணிக்கு கேப்டன் குஷால் மெண்டிஸ் 9 , சமிர சமரவிக்கிரமமா 8, சரி அசலங்கா 25, தனஞ்செய டி சில்வா 7, வெல்லாலகே 2, சமிக கருணரத்தினே 2, மதிஷா தீக்ஷனா 2, லகிரு குமாரா 4, தில்சன் மதுசங்கா 0* என ரன்கள் எடுத்தது சரிவுக்கு காரணமாக அமைந்தது.
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினார். டேவிட் வார்னரை 11 ரன்களில் வீழ்த்தி, அதே ஓவரில் ரன் ஏதும் இல்லாமல் ஸ்மித் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினால்.
ஆனால் இலங்கை அணியின் மற்ற பந்துவீச்சாளர்களால் இந்த துவக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் அதிரடியாக 51 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லபுசேன் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இன்னொரு பக்கத்தில் வந்த ஜோஸ் இங்கிலீஷ் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேற்கொண்டு மேக்ஸ்வெல் 31, ஸ்டாய்னிஸ் 20 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று, 35.2 ஓவரில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இலங்கை அணியின் தரப்பில் மதுசங்கா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இலங்கை அணிக்கு இது தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும். ஆஸ்திரேலியா அணிக்கு மூன்றாவது ஆட்டத்தில் இது முதல் வெற்றியாகும். தற்பொழுது ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து மேலே செல்கிறது.