2024க்கான ஐபிஎல் களம் தற்போது களை கட்டத் தொடங்கியிருக்கிறது. வருகிற 22ஆம் தேதி முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
நட்சத்திர வீரர்கள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை களத்தில் இருக்கும் நட்சத்திர வீரர்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்போ, அதே போல கம்பேக் கொடுக்கும் நட்சத்திர வீரர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் முக்கிய ஐந்து வீரர்களை பற்றி காண்போம்.
ரிஷப் பந்த்:
டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பந்த் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பலத்த காயங்களுக்கு இடையே சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 2023ஆம் ஆண்டு சீசனில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தனது கடின உழைப்பினால் 12 மாதங்களில் உடற்தகுதி அடைந்து அடுத்த மூன்று மாதங்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கான சான்றிதழை என்சிஏ விடமிருந்து பெற்றார். தற்போது டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக செயல்பட போகும் பந்த்தின் அதிரடியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா:
மும்பை அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான பும்ரா கடந்த 2023ஆம் ஆண்டு முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அவரது இழப்பை மும்பை அணி நன்றாகவே கடந்த சீசனில் உணர்ந்திருந்தது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், தனது பந்து வீச்சிலும் சில முன்னேற்றங்களை அடைந்திருக்கிறார். எனவே அவரது துல்லியமான வேகத்தை வரும் ஐபிஎல்லில் காணலாம்.
மிட்சல் ஸ்டார்க்:
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன இந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளரை கொல்கத்தா அணி 24.75 கோடிக்கு வாங்கியது. 2015ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் அதன் பிறகு எந்த ஐபிஎல் தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. பிறகு 2019ஆம் ஆண்டு கொல்கத்தா அணி வாங்கிய போதிலும் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். எனவே இந்த சீசனை அவர் உலகக் கோப்பைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.
பாட் கம்மின்ஸ்:
கடந்த ஆண்டு உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனைத் தவறவிட்டார். எனினும் இரு ஐசிசி கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியாவின் மகத்தான கேப்டனாக மாறிவிட்டார். இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொண்ட அவரை சன்ரைசர்ஸ் அணி 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கி கேப்டனாகவும் நியமித்துள்ளது. எனவே இவரது கேப்டன்சியில் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் கடந்த சீசனில் முதுகு வலி காரணமாக இடம்பெறவில்லை. சர்வதேச போட்டிகளில் நன்றாகவே விளையாடினாலும், சமீபத்தில் ரஞ்சி டிராபியில் விளையாடாமல் ஐபிஎல்க்கு முன்னுரிமை கொடுத்ததாக பிசிசிஐ இவரது சம்பள காண்ட்ராக்டை ரத்து செய்யப்பட்ட பிறகு அதிகமாகவே கவனம் ஈர்க்கப்பட்டார். பின் இருப்பினும் கடைசியில் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடினார். கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் விளையாடி வரும் இவர் இந்த சீசனில் அதிக கவனம் பெறுகிறார்.