இந்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பையில் யார் அதிக விக்கெட் கைப்பற்றுவார்கள்? யார் அதிக ரன்கள் எடுப்பார்கள்? இன்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பைக் கூறியிருக்கிறார்.
நடைபெறவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடர் பெரும்பாலும் எல்லோருக்கும் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் நடக்க இருக்கிறது. காரணம் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்கள் பெரும்பாலும் மெதுவாகவும் பந்து திரும்பக் கூடியதாகவும் இருக்கலாம். இப்படியான ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று.
மற்றும் அமெரிக்காவில் ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. அதே சமயத்தில் இதுவரை நடந்த போட்டிகளை எடுத்துக் கொண்டு பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளை ஓரளவுக்கு ஒத்தவாறுதான் அமெரிக்க ஆடுகள சூழ்நிலைகளும் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” டி20 உலக கோப்பையில் பும்ரா அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருப்பார். அவரிடம் நல்ல ஸ்விங் மற்றும் சீம் இருக்கிறது. மேலும் அவர் போட்டியில் மிகவும் கடினமான ஓவர்களை வீசக்கூடியவர். இப்படி கடினமான ஓவர்களை வீசும் பொழுது விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் அதிகம். எனவே நான் பும்ராவை தேர்ந்தெடுக்கிறேன்.
மேலும் அதிக ரன் அடிப்பவராக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இருப்பார். கடந்த ஆண்டுகளில் அவர் சிவப்பு அல்லது வெள்ளைப் பந்துகளில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் உயர்தரமானது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாக அமைந்திருந்தது. அப்பொழுது அவர் சிறப்பாக விளையாடிய நேரங்களில் சிறப்பாக இருந்தது. அதன் மூலமாகவே அவர் விளையாடிய அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: 2024 கடைசி டி20 உலக கோப்பையாக அமைய வாய்ப்பு இருக்கும்.. 6 மெகா நட்சத்திர வீரர்கள்
ஆஸ்திரேலியாவுக்கும் இதுவே நடக்கும். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்த விட்டாலும் கூட, அவர் சிறப்பாக விளையாடும் பொழுது ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருக்கும். அவர் களத்தில் நேரம் கொடுத்து நிற்கும் பொழுது அவரிடம் இருந்து ரன்கள் வரும். எனவே நான் அதிகரன் எடுக்கக் கூடியவராக இவரைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.