இலங்கை அணியில் விளையாடிய பந்து வீச்சாளர்கள் மத்தியில் லசித் மலிங்கா பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அந்த அளவுக்கு அவர் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை இலங்கை அணிக்கு பறைசாற்றி இருக்கிறார். அவரது பந்து வீச்சு சற்று வித்தியாசமாக இருக்கும். பந்து வீசும் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தாலும் அவருடைய பந்துவீச்சு மிகத் துல்லியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக அவருடைய யார்க்கர் பந்துகளை சமாளிக்க முடியாமல் நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன கதை நிறைய இருக்கின்றது.
தற்பொழுது அவரைப் போலவே ஒரு இளம் பந்து வீச்சாளர் பந்து வீசி வருகிறார். அவருடைய ஸ்டைலில் பந்து வீசி வருவது மட்டுமல்லாமல் அவர் எவ்வாறு துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசுவாரோ அதே போல கனகச்சிதமாக இவரும் வீசி வருகிறார்.
19 வயது இளம் இலங்கை வீரரான மாதீஷ பதிரானா தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் ( 50 ஒவர் தொடர் ) விளையாடி வருகிறார். இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் பந்து வீசுவது அப்படியே லசித் மலிங்கா பந்து வீசுவது போல இருக்கிறது. அவருடைய ஸ்டைலில் மட்டுமல்லாமல் அவர் எவ்வாறு மிகத் துல்லியமாக யார்க்கர் லெங்க்த்தில் பந்து வீசுவாரோ, அதே போலவே இவரும் மிக துல்லியமாக வீசி வருகிறார்.சமீபத்தில் இலங்கை மற்றும் குவைத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குவைத் அணி 17.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 274 ரன்கள் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. மாதீஷ பதிரானா 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. அந்த அணியில் வணிண்டு ஹசரங்கா, சரித் அசலங்கா மற்றும் தசுன் சனங்கா மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் மாதீஷ பதிரானா இலங்கை அணியில் விளையாடும் பட்சத்தில், லசித் மலிங்கா இலங்கை அணிக்கு செய்த அதே பணியை இவரும் சிறப்பாக செய்வார் என்று நாம் நம்பலாம்.