நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் 39வது ஆட்டத்தில் பெங்களூர் ராஜஸ்தான் அணிகள், மஹாராஷ்ராவின் புனே மைதானத்தில் மோதிய போட்டி குறைந்த ஸ்கோர் போட்டியாக அமைந்திருந்தது. இந்தப் போட்டியை மீண்டும் நாம் எடுத்துப்பார்க்கும் அளவிற்கு போட்டிக்குள் ஒரு சம்பவம் நடந்திருந்தது.
முதலில் டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் பந்துவீசுவதென தீர்மானிக்க அவரது முடிவு பலன் தரவுமே செய்தது. நான்காவது விக்கெட்டாக ஆட்டமிழந்த ராஜஸ்தான் கேப்டன் 27 ரன்களை அடித்திருந்தார். இதுதான் அந்த நேரத்தில் அந்த ஆட்டத்தில் அதிகபட்ச ரன். அணியோ 68 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் களமிறங்கிய ரியான் பராக் 31 பந்துகளில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்ஸர்களோடு 56 ரன்களை எடுத்து, அணியை 144 என்ற கெளரவமான ஸ்கோருக்கு கொண்டுவந்தார். ஹர்சல் படேல் கடைசி ஓவரை வீச அதில் ரியான் பராக் இரு சிக்ஸர்களை விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பெங்களூர் அணிக்கு களமிறங்கிய எந்த வீரர்களும் சுமாராய் கூட விளையாடததால் 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு சுருண்டு தோற்றது. கேப்டன் பாஃப் 21 பந்தில் அடித்த 23 ரன்தான் பெங்களூர் அணிதரப்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இளம் வீரர் ரியான் பராக்கே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்கை முடித்து ரியான் பராக் வெளியேறுகையில், ஹர்சல் படேல் அவரை கூப்பிட்டு நிறுத்தி கோபமாய் பேசியது கேமராவில் பதிவாகி இருந்து. அடுத்து ஆட்டம் முடிந்து இரு அணி வீரர்களும் வெளியேறும் போது கைக்குலுக்க ரியான் பராக் கை நீட்ட ஹர்சல் விலக்கி வெளியேறினார். இது அப்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இதற்குப் பின்னாலுள்ள காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.
தற்போது இதற்குப் பின்னாலுள்ள காரணத்தை இளம் வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். அதில் “கடந்த வருடம் ஆர்.சி.பி-க்கு எதிராக நாங்கள் விளையாடியபோது, ஹர்சல் படேல் என்னை வீழ்த்தி இருந்தார். அடுத்து அவர் என்னை வெளியேறும்படி சைகை செய்திருக்கிறார். நான் நடந்து சென்று கொண்டிருந்ததால் பார்க்கவில்லை. ஹோட்டல் ரூமில் ரீ-ப்ளேவில்தான் பார்த்தேன். இது என் மனதில் ஆழ பதிந்துவிட்டது” என்றார்.
மேலும் தொடர்ந்த ரியான் பராக் “இந்த வருட அந்தக் குறிப்பிட்ட ஆட்டத்தில், நான் அவருடைய கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து, அவர் செய்த சைகையைத் திரும்ப செய்தேன். நான் எதுவும் பேசவில்லை. எல்லை மீறவும் இல்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. முகமத் சிராஜ்தான் பேட்டிங் முடிந்து வெளியேறும் போது என்னை நோக்கிக் கூப்பிட்டு, ‘நீ சிறுவன் சிறுவனைப்போல நடந்துக்கொள்’ என்றார். நான் அவரிடம் ‘அண்ணா நான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னேன். அதற்குள் இருஅணி வீரர்களும் வர, அது அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் ஆட்டம் முடிந்து ஹர்சல் படேல் என்னிடம் கைக்குலுக்காமல் புறக்கணித்த போதுதான், இது கொஞ்சம் முதிர்ச்சி இல்லாத செயல் என்று நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார்!
Some clarification by Riyan Parag about the "Twitter made Controversies" in his Rooter Stream today –
— iThunder (@HiPrsm) June 4, 2022
With Harshal and Siraj:- pic.twitter.com/xFPp5xurdE