வீடியோ.. வெற்றிக்குப் பின் ஏங்கி அழுத சிறுவன்.. சமாதானப்படுத்திய ஆப்கான் வீரர்.. உணர்வுபூர்வமான கிரிக்கெட் நிகழ்வு!

0
3244
Mujeep

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை சுவாரசியப்படுத்தும் விதமாக, இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்து இருக்கிறது!

இன்று டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட சிறிய மைதானமான டெல்லி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

ஆனால் பட்லர் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். இங்கிலாந்து சிந்தனைக்குழு இரண்டாவது பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு இருக்கும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. இப்படி அவர்களுடைய ஆரம்ப முடிவே தவறாக அமைந்தது.

மேலும் இந்த போட்டியில் வீசப்பட்ட முதல் பந்தே வைடாக பவுண்டரிக்கு சென்று ஐந்து ரன்கள் வந்தது. இந்த இடத்திலேயே ஆட்டத்தின் மொமண்டம் என்பது ஆப்கானிஸ்தான் பக்கம்தான் இருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி அமைந்து விட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் பவர் பிளேவில் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி 79 ரன்களை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானிற்கு கொடுத்தார்கள். இதற்கு அடுத்து போட்டிக்குள் திரும்ப வந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 11 முதல் 20 ஓவரில் மூன்று விக்கெட்டை கைப்பற்றி நெருக்கடி கொடுத்தார்கள்.

ஆனாலும் கூட ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுக போட்டியில் விளையாடிய இக்ரம் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசி நேரத்தில் ரஷீத் கான் மற்றும் முஜீப் இருவரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பு தர 284 ரன்கள் ஆப்கானிஸ்தான் எடுத்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் ஐந்து பேரும் நல்ல நெருக்கடி கொடுத்து விக்கெட்டை கைப்பற்றி, 215 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்து 69 ரன்களில் வரலாற்று வெற்றியை பெற்றார்கள்.

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 16 பந்தில் 28 ரன்களும், பவர் பிளேவில் பந்து வீசியதோடு மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முஜீப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டத்தின் எல்லாப் பகுதியிலும் அவருடைய பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் மைதானத்தில் பார்வையாளராக இருந்த ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவன், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியால் அழ ஆரம்பித்து விட்டான். பின்பு முஜீப் அவனை அழைத்து தேற்றி அமைதிப்படுத்தினார். இந்தச் சிறுவனின் மனநிலை என்பது இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் மனநிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி மிகவும் ரம்மியமான ஒன்றாக களத்தில் இருந்தது!

- Advertisement -