ஹர்திக் பாண்டியாவுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு, இவரை ஆடவைங்க – நெதர்லாந்து போட்டிக்கு முன் சிறப்பான டிப்ஸ் கொடுத்த கவாஸ்கர்!

0
2593

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை வெளியில் அமர்த்திவிட்டு தீபக் ஹூடாவை உள்ளே எடுத்து வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில் கடைசி பந்துவரை ஆட்டத்தை எடுத்துச் சென்று இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டியில் இந்திய அணி 31 ரன்களுக்கு நான்கு விக்கெடுகளை இழந்து பரிதவித்த போது, ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி வரை எடுத்துச் சென்றனர்.

ஹர்திக் பாண்டியா மிடில் ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 37 பந்துகளில் 40 ரன்கள் அடித்து நல்ல பங்களிப்பை கொடுத்திருந்தார். பந்து வீச்சிலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முக்கியமான கட்டங்களில் இவர் விக்கெட் வீழ்த்தியது பாகிஸ்தான் அணியை 180 ரன்கள் வரை செல்லாமல் பார்த்துக் கொண்டது.

சூப்பர் 12ல் சுற்றில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பங்களிப்பை கொடுத்த ஹர்திக் பாண்டியாவை நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது வெளியில் அமர்த்தி நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

“பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, உடல் அளவில் ஹர்திக் பாண்டியா சற்று அசவுகரியமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அவரை நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுத்து அமர வைக்க வேண்டும். அடுத்ததாக வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி நமக்கு மிகவும் முக்கியமானது. அப்போட்டியின்போது அவர் நல்ல நிலையில் இருப்பார்.

ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் தீபக் ஹூடாவை விளையாட வைக்கலாம். பினிஷிங் ரோலில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் தினேஷ் கார்த்திக் பார்த்துக்கொள்வார்.” என்றார்.

முகமது சமி பற்றி பேசிய அவர், “உலக கோப்பைக்கு முன்பு சமி நிறைய டி20 போட்டிகளில் விளையாடவில்லை. ஆகையால் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவரை விளையாட வைத்து கூடுதல் நம்பிக்கையை வரவைக்க வேண்டும். அவருக்கும் அது பயிற்சியாக இருக்கும்.” என அறிவுறுத்தினார்.