சூர்யகுமார் பேட்டிங் செய்யும்போது நான் இதை மட்டுமே செய்ய வேண்டுமாம், ரோகித்-ராகுல் டிராவிட் இருவரும் எனக்கு சொன்ன திட்டம் – விராட் கோலி பேட்டி!

0
9165

சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் பொழுது நான் இதை மட்டும் செய்தால் போதும் என்று ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் விராட் கோலிக்கு அறிவுறுத்தியதாக தனது பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

- Advertisement -

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டக்ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெறும் 21 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கீழ் வரிசையில் வந்த இளம் வீரர் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் சர்வதேச அரை சதத்தை பூர்த்தி செய்து சரிவிலிருந்து மீட்டார். அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல்(1), ரோகித் சர்மா(17) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆடமிழந்த ஏமாற்றம் அளித்தனர். அதற்குப்பிறகு களம் கண்ட விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடக்கம்.

விராட் கோலியும் டி20 அரங்கில் தனது 33வது அரை சதத்தை அடித்தார். 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடக்கம். இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த விராட் கோலி கூறுகையில், “இதன் காரணமாகத்தான் நான் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறேன். என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி இந்திய அணிக்கு பங்களிப்பை கொடுப்பதில் முழு முனைப்புடன் இருக்கிறேன். இன்றைய நாள் மிக சிறப்பான துவக்கமாக எனக்கு அமைந்தது. என்னுடன் விளையாடிய சூரியக்குமார் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் என்னிடம் இதைத்தான் கூறினார்கள். ‘சூரியகுமார் யாதவ் நன்றாக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். நீ விக்கெட் இழக்காமல் எந்த ஒரு அவசரமும் காட்டாமல் எப்போதும் போல பேட்டிங் செய்து கொண்டே இரு’ என்றார்கள். நானும் அதை மட்டுமே செய்தேன் ஏனெனில் அந்த குறிப்பிட்ட தருணத்தில் நானும் அதிரடியாக விளையாட நினைத்து, அடிக்க முயற்சி செய்யும்போது, ஆட்டம் இழக்க நேரிட்டிருக்கலாம். அது இந்திய அணிக்கு ஆபத்தாகவும் முடிந்திருக்கலாம். என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு முயற்சித்தேன்.

சூரியகுமார் யாதவ் மிகத் தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்பதில் இருக்கிறார். எந்த ஒரு சூழலிலும் அதிரடியாகவும் விக்கெட் இழக்காமலும் விளையாடி வருகிறார். இந்த ஆறு மாதத்தில் அவரது பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. இங்கிலாந்தில் சதம் அடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார் . தனக்குள் ஏராளமான திறமைகளை அவர் வைத்திருக்கிறார். குறிப்பிட்ட பந்தில் எந்தவிதமான சாட் தேர்வு வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கணித்து, பேட்டில் எதிர்கொள்கிறார். டைமிங் அபாரமாக இருக்கிறது.” என்று புகழாரம் சூட்டினார்.