தயவுசெய்து கோலிகிட்ட இத செய்யாதிங்க.. அதுக்காக மனுஷன் காத்துகிட்டு இருக்காரு- தெ.ஆ லெஜன்ட் நிடினி எச்சரிக்கை!

0
1257
Virat

நாளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்த முறை நடக்கிறது!

ஆசியக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு விராட் கோலி மீண்டும் பழைய படி திரும்பி வந்து விட்டாரா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கும் முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக இருப்பார்கள். விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகச் சிறப்பான ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்திருக்க, 46 சதங்கள் அடித்து அதை வெகு எளிதாக முறியடிக்க கூடிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.

எனவே நடப்பு ஆசியக் கோப்பை தொடர் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமான ஒரு தொடராக இருக்கிறது. மேலும் அவர் உலகக் கோப்பையில் எப்படி இருப்பார்? என்கின்ற எதிர்பார்ப்பும் இதனோடு தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது. எனவே தனிப்பட்ட முறையிலேயே விராட் கோலிக்கு பெரிய அழுத்தம் இருக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 1998 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2011 ஆம் ஆண்டு வரை விளையாடி 656 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வலது கைப்பந்துவீச்சாளர் மஹாயா நிடினி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பற்றியான முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

அவர் விராட் கோலி பற்றி கூறும் பொழுது “ஒரு பந்துவீச்சாளர் என்ற முறையில் சொல்கிறேன் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். நீங்கள் அவரை வார்த்தையில் சீண்டினால், எப்போது நீங்கள் அப்படி செய்வீர்கள் அதிலிருந்து சிறப்பாக செயல்படலாம் என்று அவர் காத்திருக்கிறார். நீங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். அவர் இயல்பாக விளையாடட்டும். அப்போதுதான் அவர் சொந்தமாக ஏதாவது தவறுகள் செய்வார். அப்படித்தான் அவரை வெளியேற்ற முடியும். ஏனெனில் அவரை யாரும் எதுவும் சொல்லாத போது அவர் விரக்தி அடைந்து விடுகிறார்.

அதே சமயத்தில் அவரை துரத்தும் ஒருவரை அவர் பார்த்தால், அவர் ஆபத்தானவராக மாறுகிறார். என்னை பொருத்தவரை இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது அவரிடம் ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம். அவர் தானாக ஆட்டத்தில் தவறுகள் செய்யட்டும்.

விராட் கோலி ஒரு அற்புதமான பேட்டர். ரோஹித் சர்மா ஒரு ஆக்ரோஷமான துவக்க ஆட்டக்காரர். இத்தோடு இப்பொழுது உங்களுக்கு இளைஞர்கள் வருகிறார்கள். கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் இந்தியாவில் பேட் செய்யும் பொழுது எந்த ஒரு பந்துவீச்சாளரையும் சேதப்படுத்த முடியும். அவர்களுக்கான ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியின் நங்கூரங்கள். மற்றவர்கள் இவர்கள் இருவரை சுற்றி விளையாடினால் இந்திய அணி ஆபத்தானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!