நேற்று நடந்த முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் வழக்கம்போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொதப்பி இருக்கிறது. அந்த அணி ரசிகர்கள் அந்த அணி நிர்வாகத்தின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை ஹர்சல் படேல், ஹேசில்வுட் மற்றும் ஹசரங்கா என மூன்று முக்கிய வீரர்களை இந்த ஆண்டு கழட்டிவிட்டு இருந்தார்கள்.
அதே தற்பொழுது நடந்து முடிந்த ஏலத்தில் இவர்களது இடத்திற்கான வீரர்களை வாங்கியிருக்கிறார்களா என்று பார்த்தால் கிடையாது. அல்ஜாரி ஜோசப்புக்கு 11.50 கோடி, யாஸ் தயால் 5 கோடி, லாக்கி பெர்குசன் 2 கோடி டாம் கரன் 1.50 கோடி என வாங்கி இருக்கிறார்கள். ஆனால் கழட்டிவிட்ட வீரர்களுக்கு இவர்கள் சமமானவர்களாக இல்லை என்பதுதான் பிரச்சனை.
அதே சமயத்தில் ஏலத்தில் கோட்சி 5 கோடி, மதுசங்கா 4 கோடி, நுவன் துசாரா 4.8 கோடி என கூடுதல் திறமையுடன் தெரியக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களை மிக எளிதாக மும்பை ஒரு பக்கத்தில் வாங்கி குவித்து இருக்கிறது. இந்த நேரத்தில் மும்பை அணியை ஏலம் கேட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவர்களது திட்டம் வெகு பலகீனமாக இருந்தது.
இதுகுறித்து இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறும் பொழுது “இந்த ஏலத்தைப் பொறுத்தவரை ஆர்சிபி பத்துக்கு ஏழு மார்க்கை தாண்டி செல்ல மாட்டார்கள். நீங்கள் ஏலத்தை பார்த்தால் நீங்கள் கழட்டிவிட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களை சரியாக வாங்க வேண்டும்.
ஆர்சிபி முக்கியமான மூன்று பந்துவீச்சாளர்களை கழட்டி விட்டது. ஆனால் அவர்கள் ஏலத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் கழட்டிவிட்ட பந்துவீச்சாளர்களை விட சிறப்பானவர்களை வாங்கியிருக்கிறார்களா? வாங்கவில்லை.
அவர்களுக்கு இன்னும் ஒரு ஸ்பின்னர் தேவை. சின்னசாமி மைதானத்தில் ஸ்பின்னர்தான் விக்கெட் எடுக்கக் கூடியவர். அவர்கள் இதற்காக கரண் ஷர்மாவிடம்தான் போயாக வேண்டும். இங்கு ஸ்பின்னர் இல்லாமல் வேலை எளிதானது கிடையாது. நான் அவர்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கவில்லை!” என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்!