சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு பயணித்தது. ஏற்கனவே நடந்துள்ள 4 டி20 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த சூழலில் ஆறுதல் வெற்றியை கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
வேகமாக பெவிலியன் சென்ற பாகிஸ்தான்
இதன்பின் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரேஸ்வெல் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹாரிஸ் – ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ஹசன் நவாஸ் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து முகமது ஹாரிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒமைர் யூசுப் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பினன்ர் வந்த உஸ்மான் கான் 7 ரன்களிலும், அப்துல் சமத் 4 ரன்களில் பெவிலியன் செல்ல, கேப்டன் சல்மான் ஆகா – ஷடாப் கான் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. பின்னர் ஷடாப் கான் 28 ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா 51 ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை மட்டுமே சேர்த்தது.
10 ஓவர்கள்
இதன்பின் 129 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட் – ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே 18 ரன்களும், 2வது ஓவரில் 14 ரன்களும், 3வது ஓவரில் 13 ரன்களும், 6வது ஓவரில் 25 ரன்களும் விளாசினர். அதிரடியாக ஆடிய டிம் செய்பெர்ட் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.
சிறப்பாக ஆடிய ஆலன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, சாப்மேன் 3 ரன்களில் வெளியேறினார். இறுதியாக 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. சிறப்பாக ஆடிய செய்பெர்ட் 38 பந்துகளில் 97 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10வது ஓவரில் 4 சிக்சர்களை விளாசி அசத்தினர்.